சென்னை: அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளின் நடவடிக்கைகள் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் தொடர்ந்து உட்கட்சி பிரச்னைகள் நிலவி வருகின்றன. மாவட்ட செயலாளர் நியமனங்கள், பதவி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டும் அதை ஏற்க மறுத்த வேலுமணி, தனது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எடப்பாடி அணியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: காத்து வாங்கிய மகளிர் அணி கூட்டத்தால் கடுப்பான பழனிசாமி! 400க்கு 200 மட்டுமே ஆஜர்! கடும் அதிருப்தி!
கடந்த மாதம் நடைபெற்ற உட்கட்சி ஆலோசனைக் கூட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் வேலுமணி, “என்னை நம்பி பலர் வந்திருக்கும்போது அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்காமல் எனக்கு மட்டும் உயர்பதவி தந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாவட்ட அளவில் பல ஆண்டுகளாக உழைத்தவர்களை புறக்கணித்து நான் மட்டும் பதவி வாங்க விரும்பவில்லை” எனக் கூறியுள்ளார்.

இதேபோல் முன்னாள் அமைச்சர்களான நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, காமராஜ், கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை ஏற்க முடியாது எனக் கடிதம் அனுப்பியுள்ளனர். “பதவிகள் தேவையில்லை, சாதாரண தொண்டர்களாகவே இருப்போம்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொங்கு மண்டலத் தலைவர்கள் மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான வட மாவட்ட நிர்வாகிகள் இணைந்து செயல்படும் அறிகுறிகள் தெரிவதும் கட்சியில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் நியமனம் உள்ளிட்ட முடிவுகளும் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த தொடர் நிகழ்வுகள் அதிமுகவில் “அதிமுக 2.0” அல்லது புதிய தலைமை மாற்றம் குறித்த விவாதங்களை கிளப்பியுள்ளன. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களுக்கு முன்பாக கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த அதிருப்தியை எடப்பாடி எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது தற்போது பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. மூத்த நிர்வாகிகளுடன் சமரசம் ஏற்படுமா அல்லது மேலும் மாற்றங்கள் வருமா என அதிமுக வட்டாரங்கள் உற்று நோக்கி வருகின்றன.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக சிதறிக்கிடக்கிறது! தவெகவில் இணைந்த காரணம் அதுதான்! வளர்மதி ஓபன் டாக்!