சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அ.தி.மு.க.வில் அரசியல் பரபரப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்ததாக விலகி வரும் நிலையில், பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நடத்தி வரும் ஆலோசனைக் கூட்டங்களையும் சில எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்து வருவது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் மற்றும் அமைப்பு வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வாரியாக கடந்த ஆறு நாட்களாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வந்தார். ஆறாவது நாளான இன்று, முதலில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளுடனும், பின்னர் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகளுடனும் அவர் ஆலோசனை நடத்தினார். இதன் மூலம் ஆறு நாள் தொடர் ஆலோசனைக் கூட்டங்கள் நிறைவடைந்தன.
ஆனால், இன்று நடைபெற்ற கிருஷ்ணகிரி மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ. பாலகிருஷ்ண ரெட்டி பங்கேற்கவில்லை. அவர் கூட்டத்தை திட்டமிட்டு புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: AI பயன்படுத்த தெரிந்தால் மட்டுமே இனி கட்சிப்பதவி!! கறார் காட்டும் எடப்பாடி பழனிசாமி! அதிமுகவில் ஷாக்!
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தனி ஆலோசனைக் கூட்டங்களை நடத்திய சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணியுடன் பாலகிருஷ்ண ரெட்டி இணைந்து செயல்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் அவரது மாவட்டச் செயலாளர் பதவி மாற்றப்பட்டு அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியே அவர் கூட்டத்தில் பங்கேற்காததற்குக் காரணம் என கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதற்கு முன்பும் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனைக் கூட்டங்களில் சில எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை. குறிப்பாக, ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.எம். சுகுமார் மற்றும் முன்னாள் அமைச்சரும் திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.சி. வீரமணியும் சமீபத்திய ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்திருந்தனர்.
இதற்கிடையில், ஏற்கனவே அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள நிலையில், தற்போது ஆலோசனைக் கூட்டங்களை புறக்கணிக்கும் எம்.எல்.ஏ.க்களும் கட்சி மாறவுள்ளார்களா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
எனினும், ஒவ்வொரு ஆலோசனைக் கூட்டத்திலும் பேசிய எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வுக்கு வலுவான எதிர்காலம் இருப்பதாகவும், கட்சியை விட்டு விலகிச் செல்பவர்களை நினைத்து யாரும் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் நிர்வாகிகளுக்கு நம்பிக்கை அளித்து வருகிறார்.
இதையும் படிங்க: அதிமுகவில் அடுத்த விக்கெட்! ஓசூர் எம்.எல்.ஏ ஆப்சென்ட்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி!