தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சூரியனார் கோவில் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 16ஆம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வரால் திறக்கப்பட்டது.
ஆனால் திறப்பதற்கு முதல் நாளே ஊராட்சி மன்ற அலுவலகத்தின் இரண்டு அறைகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்துள்ளன. இதையடுத்து அவசர அவசரமாக அவை பூசப்பட்டன. பின்னர் முதலமைச்சர் திறப்பு விழாவிற்கு பிறகு இன்று பழைய ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து புதிய கட்டிடத்திற்கு ஊழியர்கள் வந்து பணியாற்றியுள்ளனர்.

அப்போது, மீண்டும் கட்டடத்தின் மேல் கூரை இடிந்து விழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த அறையில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து நான்கு நாட்கள் கூட முடிவடையாத நிலையில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தின் மேற்கூரைகள் இடிந்து விழுந்து வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: இளையராஜா காலில் விழுந்த அண்ணாமலை.. என்ன நடந்தது இசை நிகழ்ச்சியில்..?
எனவே, இந்த தொகுதியைச் சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், மாவட்ட ஆட்சியர் மற்றும் கட்டிட செயற்பொறியாளர்கள் ஆகியோர் கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து, அதன்பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சூரியனார் கோவில் ஊராட்சியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை, நான்கு நாட்களுக்கு முன்பாக, கடந்த 16ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஆனால் கட்டிடம் திறக்கப்படுவதற்கு முதல் நாளே, இரண்டு அறைகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்து, அவசர அவசரமாக பேட்ச் வொர்க் செய்திருக்கிறார்கள். முதலமைச்சர் திறப்பு விழாவிற்கு பிறகு, தற்போது, மீண்டும் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. ஒட்டு மொத்தமாக பேட்ச் வொர்க்கில் கட்டப்பட்ட தரமற்ற கட்டிடத்தைத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்திருக்கிறார்.

அதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் ஊராட்சி மன்ற ஊழியர்கள் யாரும் அந்த அறையில் இல்லாததால், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. ஆனால் எப்போது கட்டிடம் இடிந்து விழுமோ என்ற பயத்தில், இனி எப்படி ஊழியர்கள் அங்கிருந்து பணியாற்ற முடியும்? உடனடியாக, தரமற்ற முறையில் கட்டிடம் கட்டிய ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு சார்பில் இந்தக் கட்டிடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்த பிறகே, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அந்த வீடியோவில் வந்த வார்த்தைகள்... வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜுனா..!