எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை ஒருமையில் தவெகவின் ஆதவ் அர்ஜூனா பேசிய அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஆதவ் அர்ஜூனாவும், புஸ்ஸி ஆனந்தும் நடந்த படி பேசி செல்கின்றனர். அப்போது எடப்பாடியை நம்பி யாரும் கூட்டணிக்கு வரத் தயாராக இல்லை, பாஜகவே அதிமுகவை கூட்டணியில் இருந்து கழற்றி விடும் என்று தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசுகிறார். மேலும் அண்ணாமலை 10 பேரை வெச்சிட்டு 20%, 19 % ஓட்டு வாங்குவாறாமா? என சிரித்தபடி கிண்டலாக பேசிய காட்சிகள் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை குறித்த பேச்சுக்கு ஆதவ் அர்ஜுனா வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது;
இதையும் படிங்க: வெள்ளைக்கொடியா? காவிக்கொடியா? இபிஎஸ் கேள்விக்கு மு.க.ஸ்டாலின் நச் பதில்..
அனைவருக்கும் வணக்கம்,
எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதைத் தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது பொதுவாழ்வில் நான் கடைப்பிடித்தது கிடையாது. என்னுடன் பயணிப்பவர்களுக்கு அது நன்கு தெரியும்.

என்னுடைய அரசியல் பயணத்தில் எத்தனையோ விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லாம் என் மீது முன்வைக்கப்படும் பொழுது, எந்த இடத்திலும், யார் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை நான் வைத்தது கிடையாது.
உண்மையும், நேர்மையும் கொண்ட ஒரு புதிய மக்கள் அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவலுடனே நான் இந்த அரசியல் களத்திற்கு வந்தேன். தனிமனித விமர்சனங்கள் ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல எனும் கொள்கையை உறுதியாகக் கொண்டுள்ளேன். அப்படியிருக்கையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜனநாயகப்பூர்வ பொது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் எனது அரசியல் வாழ்வில் ஒரு கற்றலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். அந்த வகையில், கொள்கைக்கான அரசியலையும், வெளிப்படைத்தன்மையான ஜனநாயகத்தையும் என்றும் மதித்து பயணிப்பதே எனது இலக்கு…
இவ்வாறு ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எடப்பாடி இப்படி பண்ணுவாருனு நினைக்கல.. கொடநாடு வழக்கை சுட்டிக்காட்டி துரைமுருகன் கொடுத்த ட்விஸ்ட்..!