கடந்த 2024ஆம் ஆண்டு, தனது சுதந்திர தின உரையில், "பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொது மக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதல் கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் தமிழ்நாடு முழுவதும் துவங்கப்படும்" என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

முதல்வர் மருந்தகத்தைப் பொறுத்தவரை, இந்தக் கடைகளில் காப்புரிமை இருக்கக்கூடிய மருந்துகள் கிடைக்காது. பொதுப் பெயர் மருந்துகள் எனப்படும் ஜெனரிக் மருந்துகளும், பெரிய பிராண்டுகள் தயாரித்து விற்கக்கூடிய ஜெனரிக் மருந்துகளும் கிடைக்கும் என்றும் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: பூராமே பேட்ச் ஒர்க் தானா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆதாரத்துடன் கிழித்த அண்ணாமலை..!
அதன்படி தமிழக கூட்டுறவு துறை சார்பில் மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்யும் வகையில் ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி தொடங்கப்பட்டது. இதில் முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் ‘முதல்வர் மருந்தகம்’ அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வர் மருந்தகத்தில் தொடக்கம் முதலே போதிய மருந்துகள் வழங்கப்படவில்லை என்ற புகாருக்கு உள்ளானதாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது;
மக்கள் நலனுக்காகத் திட்டங்களைச் செயல்படுத்தாமல், ஒரு நாள் விளம்பரத்துக்காகச் செயல்படுத்தினால் என்ன ஆகும் என்பதற்கு மற்றுமொரு உதாரணம், திமுக அரசால் பலத்த ஆரவாரத்துடன் ஆரம்பிக்கப்பட்ட, முதல்வர் மருந்தகம்.

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டம், தொடக்கம் முதலே போதிய மருந்துகள் அரசால் வழங்கப்படவில்லை என்ற புகாருக்கு உள்ளானது. பலமுறை கோரிக்கை வைத்தும், திமுக அரசு நடவடிக்கை எடுக்காததால், வாடகை, மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட அடிப்படைச் செலவுகளைச் சமாளிக்க, முதல்வர் மருந்தகங்களில் தற்போது மாவு விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர் மருந்தக உரிமையாளர்கள்.
பொதுமக்களும், முதல்வர் மருந்தகங்களில் மருந்துதான் கிடைக்கவில்லை, மாவாவது கிடைக்கிறதே என்று வாங்கிச் செல்கின்றனர். இதற்குப் பேசாமல், முதல்வர் மாவகம் என்று பெயர் வைத்திருக்கலாம். நான்காண்டு காலமாக, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் திமுக ஆட்சிக்கு, இந்தப் பெயர் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இளையராஜா காலில் விழுந்த அண்ணாமலை.. என்ன நடந்தது இசை நிகழ்ச்சியில்..?