ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே, புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த கார்பென்டர் ஜெகத்குமார் - பிரியா தம்பதிக்கு 2 மகள்கள் இருந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக பிரியா பிரிந்து சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், சந்தைமேடு பகுதியில் பிள்ளைகளுடன் வசித்து வந்தார் ஜெகத்குமார்.
கே.ஜி. கண்டிகை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10 வகுப்பு படித்து வந்தார் ஜெகத்குமாரின் ஒரு மகள். நேற்று காலை ஜெகத்குமார் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் அவரது மகள் மற்றும் ஊரிலிருந்து வந்திருந்த அவரது அத்தை மகள்களும் இருந்துள்ளனர். மாலை நேரத்தில் ஒரு இளைஞன் வீட்டிற்குள் புகுந்திருக்கிறார். இதைப் பார்த்து சிறுமிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் கூச்சலிட்ட நிலையில், அந்த இளைஞன், சிறுமியின் அத்தை மகளை கத்தியால் குத்தி வீட்டிற்கு வெளியே தள்ளிவிட்டு, சிறுமியை மட்டும் வீட்டிற்குள் வைத்து பூட்டிக்கொண்டிருக்கிறார்.

பின்பு, என்ன லவ் பண்ண மாட்டியா? எத்தனை முறை உன் பின்னாடி வந்து கெஞ்சுறது என்று பலமுறை கேட்டு, அந்தச் சிறுமியை அந்த வாலிபர் கத்தியால் குத்தியிருக்கிறார். இதனிடையே, வெளியே தள்ளப்பட்ட சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், வீட்டை திறந்து பார்த்தபோது, சிறுமி இறந்து கிடந்துள்ளார். ரத்தம் படிந்த கத்தியுடன் நின்றிருந்த இளைஞனை பிடித்து பொதுமக்கள் தாக்கியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு, இளைஞனையும் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தை சுட்டிக்காட்டி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டு, மற்றொரு சிறுமி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. பிள்ளையை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்.

இச்சம்பவத்தில் பிடிப்பட்ட கொலையாளி, குடிபோதையில் இருந்ததாக வெளியாகியுள்ள தகவல், போதைப் பொருட்களின் பிடியில் தமிழகம் சிக்கி சீரழிந்து கிடப்பதையும், பெண்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக தமிழகம் உருமாறியுள்ளதை உணர்த்துகிறது. இதுதான் திமுக-வின் விடியல் ஆட்சியா என கேள்வி? சட்டம் ஒழுங்கு செம்மையாக இருந்தால் தானே குற்றவாளிகளுக்கு பயம் இருக்கும். இச்சம்பவத்தை காணும் ஒவ்வொரு குடும்பமும், நாளை நம் குடும்பப் பெண்களுக்கும் இதே நிலைமைதானோ என்ற பயத்தில்தான் தமிழகத்தில் வாழ்கிறார்கள் என்பது வெட்கக்கேடானது. முதலமைச்சர் ஸ்டாலின் தனது துருப்பிடித்துப் போன இரும்புக்கரத்தை பழுது பார்க்க வேண்டிய நேரமிது" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING ஞானசேகரன் குற்றவாளி - அண்ணா பல்கலைக்கழக வழக்கில் நீதிபதி அதிரடி அறிவிப்பு!
இதையும் படிங்க: வெறித்தனத்தின் உச்சம்; துடிக்கதுடிக்க தந்தை கண்முன்னே 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!