கரூரில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்திய நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்களுக்குத் தமிழக அரசு வகுத்துள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து தவெக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியான கேள்விகளை எழுப்பியுள்ளது. பொதுக்கூட்டங்களுக்கு 30 நாட்களுக்கு முன்பே அனுமதி கோர வேண்டும் என்ற விதி தன்னிச்சையானது. அங்கீகரிக்கப்பட்டக் கட்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பது பாரபட்சமானது. அரசின் பாதுகாப்புப் பொறுப்புகளைக் கட்சிகள் மீது திணிப்பது சட்டவிரோதமானது எனத் தவெக தரப்பில் வாதிடப்பட்டது.

தவெக-வின் வாதத்தைக் கேட்ட தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, இந்த விதிகளில் என்ன தவறு உள்ளது? வருமான வரி விலக்கிற்காகப் பல கட்சிகள் காளான்கள் போலத் தொடங்கப்படுகின்றன. நீண்ட வரலாறு கொண்ட, தேர்தல்களில் வென்றக் கட்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் என்ன தவறு? தவெக இதுவரை எத்தனை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளது? என சரமாரி கேள்விகளை எழுப்பினார்.
இதையும் படிங்க: ஊடக விவாதங்களில் பங்கேற்க வேண்டாம்! தவெகவினருக்கு புஸ்ஸி ஆனந்த் அதிரடி உத்தரவு!
5,000 பேருக்கு மேல் பங்கேற்கும் கூட்டங்களுக்கு மட்டுமே இந்த விதிகள் பொருந்தும் என்பதால், அதனைத் தவிர்க்க 4,998 பேர் வருவார்கள் எனக் கூறித் தவெக விண்ணப்பிக்கிறது. ஒரே இடத்திற்குப் பல கட்சிகள் போட்டியிடும் போது மட்டுமே அங்கீகரிக்கப்பட்டக் கட்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மற்றபடி முதலில் வருவோருக்கே முன்னுரிமை" என அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அரசியல் கட்சிகளின் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பெறுவது குறித்து அரசு ஏன் பரிசீலிக்கக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், தவெக தாக்கல் செய்த இந்த மனுவிற்கு 3 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
கரூரில் 41 உயிர்கள் பலியான சம்பவத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்த வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்ய தவெக முயல்வது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: வசனம் பேசலாம்.. ஆனால் வாக்கு விழாது! விஜய் மற்றும் தவெக-வை விமர்சித்த வானதி சீனிவாசன்!