கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில், காட்டுமன்னார்கோயில் எம்.எல்.ஏ ஜோதிமணி, மக்கள் பணிகளுக்காக தொகுதிக்குச் செல்ல போதிய போக்குவரத்து வசதி இல்லாமல் தவிப்பதாகக் கூறியிருந்தார். புதியதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பல எம்.எல்.ஏக்கள், தங்களது தொகுதிகளில் நடைபெறும் மக்கள் பிரச்சினைகள் மற்றும் பணிகளை நேரில் சென்று கவனிப்பதற்காக பேருந்து அல்லது தனியார் டாக்ஸிகளைநம்ப வேண்டிய நிலை இருப்பதாக அவர் தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார். இதனால் மக்கள் பணிகளை மேற்கொள்வதில் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதுதொடர்பாக மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சியினரும் மகிழ்ச்சி அடையும் வகையில் அதிரடி அறிவிப்பை இன்று சட்டப்பேரவையில் 110 விதிகளின் கீழ் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் விஜய் பேரவையில் அறிவித்ததாவது: மக்களுக்கான நிர்வாகம் நேர்மையின் பாதையில் என்ற அடிப்படையில், லஞ்ச லாவண்யமற்ற, நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சேர்க்கும் நோக்கில் தமிழக வெற்றி கழக அரசு செயல்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: #BREAKING: MLA- களுக்கு கார்... பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை..! அறிவிப்புகளை அள்ளிவீசிய முதல்வர் விஜய்..!!
தங்களது தொகுதி மக்களின் குறைகளை கேட்டறியவும், அரசு திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை கண்காணிக்கவும், தங்களது தொகுதி முழுவதும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பயணங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
பொருளாதார பலம் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றும் மற்றும் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள், தங்களது மக்கள் பணியைத் தொய்வின்றி தொடர்வதற்கும், தங்களது தொகுதிப் பணிகளைத் திறம்பட மேற்கொள்வதற்கும் வசதியாக, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அறிவிப்பு, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பயணத் தேவைகளுக்காக பிறரைச் சார்ந்து இருப்பதைத் தடுத்து, அவர்கள் எவ்வித சமரசமும் இன்றி சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தங்களது தொகுதிக்கு உட்பட்ட கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு எளிதாகப் பயணம் செய்து, தொகுதி முழுவதும் உள்ள மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் குறைகளுக்குத் தீர்வு காண வழிவகுக்கும்.
அதோடு மட்டுமின்றி, சட்டமன்ற உறுப்பினர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைத்து, கடைக்கோடி மக்களுக்கு லஞ்ச லாவண்யமற்ற, நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை அளிக்கவும் இது உதவும்.
மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, சட்டமன்ற உறுப்பினர்கள் ஓர் உதவியாளரை நியமித்துக் கொள்வது அவசியம் எனக் கருதப்படுகிறது.
எனவே, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வாங்கி வழங்கும் வாகனத்தைப் பராமரிக்கும் விதமாக, வாகனத்திற்கு ஓட்டுநர், எரிபொருள், வாகனப் பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வாகனப் படியாகவும், அலுவலகப் பணிகளில் உதவி செய்ய ஓர் உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் உதவியாளர் படியாகவும் வழங்கப்படும். இதற்காக உரிய சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு ஆணைகள் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கூறினார்.
இதையும் படிங்க: "நாளைய PM நீங்க தான் தளபதி"..! பேரவையை அதிர வைத்த அமைச்சர் சரத்..! முதல்வர் விஜய்க்கு புகழாரம்..!!