தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதுரையில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில், 6 ஆயிரத்து 500 பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்க இருக்கின்றனர். மேலும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.45 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை புறப்பட்டு, பின்னர் மதியம் 1.05 மணிக்கு மதுரை வந்தடைந்தார். அவருக்கு அமைச்சர்கள் பெரியசாமி, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மூர்த்தி உள்ளிட்ட பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க: மண்டகப்படியில் மயங்கி விழுந்த பக்தர்.. திருவிழா கூட்டத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்.. சித்திரை திருவிழாவில் சோகம்..!

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி கார் மூலம் அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் சிலை பகுதிக்கு வருகை தந்த முதலமைச்சர், அங்கிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கான பிரமாண்டமான ரோடு ஷோவை தொடங்கினார்.

இந்த ரோடு ஷோ வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர், சுந்தரராஜபுரம் மார்க்கெட், டி.வி.எஸ்.நகர் சுரங்க பாதை வழியாக பழங்காநத்தம், வ.உ.சி.பாலம், எல்லீஸ்நகர் 70 அடி ரோடு, பை-பாஸ் ரோடு, பொன்மேனி, காளவாசல், குருதியேட்டர், ஆரப்பாளையம் பஸ் நிலையம், ஜல்லிக்கட்டு ரவுண்டானா, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு வழியாக மேயர் முத்து சிலை பகுதிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கு புதிதாக அமைக்கப்பட்ட முன்னாள் மேயர் முத்துவின் வெண்கல சிலையை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.

ரோடுஷோ செல்லும் வழியில் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் நடைபயணமாக சென்று பொதுமக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திதார். அப்போது ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோவிலில் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் வழிநெடுகிலும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க: கண்டாங்கி பட்டு உடுத்தி.. தங்கப்பல்லக்கில் மதுரை கள்ளழகர்..! திரண்ட பக்தர்கள்..!