தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானதும், கோவை மாவட்டத்தில் தி.மு.க.வினர் வழங்கிய எவர் சில்வர் அண்டாக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. வாக்காளர்களை கவரும் வகையில் வீடு வீடாக எவர் சில்வர் அண்டா கொடுக்க திட்டமிட்ட தி.மு.க.வினர், முன்கூட்டியே டோக்கன் வழங்கியிருந்தனர். ஆனால், டோக்கன் பெற்றவர்களில் சிலருக்கு மட்டுமே அண்டா கிடைத்தது. மற்றவர்களுக்கு கிடைக்காததால் பெரும் கோபம் ஏற்பட்டது.
குறிப்பாக, மாநகராட்சி 84-வது வார்டு, உக்கடம் புல்லுக்காடு மைதானம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. ஆனால் 150 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், மீதமுள்ள அண்டாக்களை பதுக்கி வைத்ததாகவும் பெண்கள் குற்றம்சாட்டினர்.
அண்டா கிடைக்காத சில பெண்கள், தி.மு.க.வினரிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும், ஒரே வீட்டுக்கு தி.மு.க. அண்டா, அ.தி.மு.க. ஹாட்பாக்ஸ், தட்டு போன்ற பொருட்களை பரப்பி வைத்து வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட சிலர், "எங்களுக்கு இதெல்லாம் கிடைத்தது, உங்களுக்கு கிடைத்ததா?" என்று கேட்டு கோபத்தை தூண்டினர்.
இதையும் படிங்க: வெள்ளிக்காசு, டிவி கிஃப்ட்.. கோவையில் கொட்டும் பரிசு மழை! களத்தில் குதித்த அரசியல் கட்சிகள்!

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், தேர்தல் பறக்கும் படைக்கு தி.மு.க.வினர் பதுக்கி வைத்திருந்த கிடங்கு இருப்பிடத்தை ரகசியமாக தெரிவித்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 12:30 மணியளவில், தெற்கு உக்கடம் காந்தி நகர் பகுதியில் உள்ள ஒரு அறைக்கு சென்ற பறக்கும் படையினர், 98 எவர் சில்வர் அண்டாக்களை பறிமுதல் செய்தனர்.
அண்டாக்கள் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி படங்களுடன் கூடிய பிளாஸ்டிக் கவரில் இருந்ததால், உடனடியாக பாதுகாப்பு அறையில் சீல் வைக்கப்பட்டு, கோவை தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், இனி பரிசுப் பொருட்கள் வழங்க முடியாது என்பதை உணர்ந்த பெண்கள், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்ததாகவும், இதனால் பறிமுதல் சாத்தியமானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"எந்த கட்சியாக இருந்தாலும் பரிசு பொருள் கொடுத்தால் அனைவருக்கும் சமமாக கொடுக்க வேண்டும். சிலருக்கு மட்டும் கொடுத்தால் ஓட்டு போட மாட்டோம்" என்று பெண்கள் கோஷமிட்டனர். இச்சம்பவம் கோவை தொகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தலைக்கேறிய ரீல்ஸ் மோகம்... தந்தையை மூட்டை கட்டி கொரியர் அனுப்பிய மகள்..!!