தவெக தலைவர் விஜய் ஆண்டுதோறும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி மாமல்லபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ-மாணவிகளை அழைத்து அவர்களுக்கு பரிசு வழங்கினார். விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் விஜய் மாணவிகளின் தோளில் கை போட்டதை தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் விமர்சித்து பேசியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், தற்போது கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாணவிகளை அணைப்பது, அனுமதி இன்றி தொடுவது போன்ற தகாத செயலில் விஜய் ஈடுபட்டார் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் வழக்கறிஞர் பிரிவு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சிவமூர்த்தி கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் விஜய் மீது புகாரளித்துள்ளார். அதில், கடந்த 28 ஆம் தேதி நடந்த கல்வி விருது வழங்கு விழாவில் விஜய் மாணவிகளை அணைப்பது, அனுமதி இன்றி தொடுவது போன்ற தகாத செயலில் ஈடுபட்டார் என்றும், இச்செயல் சமுதாயத்தில் பெண் குழந்தைகளை தொடுவது தவறில்லை என்கிற தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும் என்பதால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: தவெகவில் நவீன தீண்டாமையை நுழைக்கிறாரா விஜய்?... ஜெயலலிதா பாணியில் அதிரடி சம்பவம்...!

முன்னதாக இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏவுமான வேல்முருகன், விஜய்யை விமர்சிப்பதாக நினைத்து சர்ச்சையில் சிக்கினார். 2 கிராம் தங்கத்துக்காக ஒரு கூத்தாடியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வைக்கின்றார்கள். இது தமிழனுக்கு அழகா?.. ஈனப்பிறவிகள்.. என பேசி இருந்தார். வேல்முருகனின் இந்த பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் மற்றும் இன்றி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். வேல்முருகன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வேல்முருகன் பேசியிருப்பது சரியல்ல என்று கூறி வந்தனர். இதற்கிடையே தான் பேசியது சரிதான்.. மன்னிப்பு கேட்க முடியாது.. விஜய்யும் பத்திரிக்கயாளர் சந்திப்பை நடத்தி என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கட்டும் என்று கூறினார்.

இதையடுத்து வேல்முருகன் மீது தவெக நிர்வாகிகள் சார்பில் தேசிய குழந்தைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மாணவிகளையும் அவர்களது பெற்றோர்களையும் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பேசியதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் மீது தேசிய குழந்தைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நிலையில் வேல்முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படலாம் எனக்கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் தற்போது தமிழக வாழ்வுரிமை கட்சியின் வழக்கறிஞர் பிரிவு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சிவமூர்த்தி கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் விஜய் மீது புகாரளித்துள்ளார்.
இதையும் படிங்க: தேமுதிகவுக்கு 2026-ல் ராஜ்யசபா சீட்... அடித்து சொன்ன பிரேமலதா விஜயகாந்த்!!