தமிழகத்தில் வரும் ஜூன் 24 ஆம் தேதியுடன் 6 மாநிலங்களவை எம்.பிக்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதற்காக வரும் ஜூன் 19 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் திமுகவுக்கு 4 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களும், அதிமுகவுக்கு இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்களும் கிடைக்கும் சூழல் உள்ளது. இதில், திமுக சார்பில் 4 மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் வழக்கறிஞர் பி. வில்சன், கவிஞர் சல்மா, சேலம் எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு மாநிலங்களவை எம்.பி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதிமுக சார்பில் தற்போது வரை மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

இந்த இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களை யாருக்கு வழங்கலாம் என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை, கொள்கை பரப்புச் செயலாளர் வித்யா, முன்னாள் அமைச்சர் செம்மலை ஆகியோரின் பெயர்கள் முனுமுனுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை. அதிமுக உடனான கூட்டணியில் மாநிலங்களவை இடத்தைப் பெறுவது தேமுதிகவின் உரிமை. 2024 மக்களவைத் தேர்தல் பேச்சுவார்த்தையின்போதே இந்த முடிவு எட்டப்பட்டது.
இதையும் படிங்க: ரொம்ப பீத்திக்காதீங்க ஸ்டாலின்.. அம்பலப்படுத்துனேன் அசிங்கப்பட்டு போவீங்க.. இபிஎஸ் எச்சரிக்கை..!

கடந்த மக்களவைத் தேர்தலில் 5 இடங்களுடன், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருகிறோம் என அதிமுக உறுதியளித்தது. அரசியலில் நம்பிக்கை முக்கியம். வார்த்தைகள் முக்கியம். சொன்ன வார்த்தைகளைக் காப்பாற்றினால் தான் மக்கள் உங்களை நம்புவார்கள். ஏற்கெனவே 2 முறை தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி கிடைக்க வேண்டியது. ஒரு முறை அன்புமணியும், இன்னொரு முறை ஜி.கே. வாசனும் பெற்றுக் கொண்டனர். அது பேச்சுவார்த்தையில் நாங்களும் ஒப்புக்கொண்டோம். சரி. அதன்பிறகு எங்களுக்கு கொடுப்பதாக உறுதியளித்தார்கள்.

இது எங்களின் முறை. எங்களுக்கு ராஜ்யசபா சீட் தர வேண்டியது அவர்களின் கடமை என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தேமுதிக பொருளாளர் சுதீஷ் சந்தித்து பேசி வருகிறார். ராஜ்யசபா எம்.பி சீட் வழங்குவது தொடர்பாக அதிமுக - தேமுதிக இடையே பிரச்சனை நீடித்து வரும் நிலையில் இந்த திடீர் சந்திப்பு நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமித் ஷா கையில் எடுத்து புது ஆயுதம்... அதிர்ச்சியில் உறைந்து போன எடப்பாடி பழனிசாமி...!