இன்று காலை முதல் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு காற்று வீசிக்கொண்டிருக்கிறது. திமுக தலைமையிலான கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை வேகமாக தொடங்கியுள்ள நிலையில், இன்று முக்கியமான ஒரு நாளாக அமைந்துள்ளது. குறிப்பாக மனித நேய மக்கள் கட்சி உடனான பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.
திமுக ஏற்கனவே தனது தொகுதி பங்கீட்டு குழுவை அமைத்து, தலைமை தொகுதி பேச்சுவார்த்தையாளராக டி.ஆர். பாலுவை நியமித்திருந்தது. மனித நேய மக்கள் கட்சியைப் பொறுத்தவரை, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று மணப்பாறை, பாபநாசம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றது. அந்த வெற்றி அவர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. எனவே இம்முறை ஐந்து தொகுதிகள் வரை கேட்கும் மனநிலையில் அக்கட்சி உள்ளது. கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஏற்கனவே பல நேர்காணல்களில் இதைத் தெளிவாகக் கூறியிருக்கிறார்.

கட்சியின் சிறப்புப் பொதுக்குழுவிலும் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு தருவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்கும் சமூக நீதிக்கும் திமுக ஆட்சி தொடர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் திமுக தரப்பில் நிலைமை சற்று வித்தியாசமாக உள்ளது. கூட்டணி கட்சிகள் அதிகரித்துள்ள நிலையில் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதிகள் என்பது சிக்கலான புதிராக மாறியுள்ளது.
இதையும் படிங்க: இப்படி தான் இருக்கணும்..!! HAIR TRANSPLANT மையங்களுக்கு கடும் கட்டுப்பாடு..! தமிழக அரசு கறார்..!!
மனித நேய மக்கள் கட்சியும் 5 தொகுதிகள் கேட்டாலும், திமுக எத்தனை ஒதுக்கும் என்பது இன்றைய பேச்சுவார்த்தையில்தான் தெளிவாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மொத்தத்தில் இன்றைய பேச்சுவார்த்தை வெறும் தொகுதி எண்ணிக்கை பற்றிய விவாதமாக மட்டும் இல்லாமல், கூட்டணியின் ஒற்றுமை, ஒவ்வொரு கட்சியின் வாக்கு வங்கி பலம், பிராந்திய செல்வாக்கு, சின்னம் தொடர்பான கோரிக்கைகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஆழமான பேச்சாக இருக்கும்.
இதையும் படிங்க: விடியா ஆட்சிக்கு வீட்டு BILL- லே சாட்சி..!! இனியும் தொடரக்கூடாது...!! அதிமுக கண்டனம்..!!