தருமபுரியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, திமுக தலைமையிலான கூட்டணி உடையும் நிலையில் இருப்பதாக கடுமையாக விமர்சித்தார்.
பிரசாரக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் 2,080ஆகவும், படுகொலைகள் 8,008ஆகவும், போக்ஸோ வழக்குகள் 39,900ஆகவும் உயர்ந்துள்ளன. தமிழக சரித்திரத்தில் இப்படி ஒரு மோசமான சட்டம் ஒழுங்கு நிலையை இதுவரை பார்த்ததில்லை” என்று கூறினார்.
அண்ணாமலை மேலும் பேசுகையில், “இதைத்தான் சேலத்தில் பிரேமலதா விஜயகாந்தும் பேசினார். எங்கள் அண்ணன் ரொம்ப நல்லவர், ஆனால் சட்டம் ஒழுங்கு சரியில்லை. எங்கள் அண்ணன் ரொம்ப நல்லவர், ஆனால் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் புழக்கம் அதிகரித்துவிட்டது என்று அவர் கூறினார்” என்று சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: கருணாநிதி செஞ்ச அதே தப்பை மு.க.ஸ்டாலினும் செய்கிறார்!! அண்ணாமலை குற்றச்சாட்டு!
பிரதமர் நரேந்திர மோடியும் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக பிரசாரம் செய்வதை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, “ஆனால் ராகுல் காந்தியின் பிரசாரம் தனியாகவும், ஸ்டாலினின் பிரசாரம் தனியாகவும் நடைபெறுகிறது. அதனால்தான் இந்த கூட்டணி இன்றைக்கோ நாளைக்கோ உடையக்கூடிய நிலையில் உள்ளது” என்றார்.

காங்கிரஸ்-திமுக கூட்டணியை “பொருந்தாக் கூட்டணி” என்று விளித்த அண்ணாமலை, “கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் கூட, திமுகவுடன் கூட்டணியில் மட்டுமே இருப்பதாகவும், லஞ்சம் விவகாரத்தில் தங்களுக்கு பொறுப்பில்லை என்றும் கூறுகிறார். கூட்டணிக் கட்சிகளே ஒருவரையொருவர் விமர்சித்துக் கொள்கின்றனர்” என்று சுட்டிக்காட்டினார்.
தருமபுரி தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணியை ஆதரித்து பிரசாரம் செய்த அண்ணாமலை, திமுக கூட்டணியின் உள் மோதல்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி தீவிர தாக்குதல் நடத்தினார்.
தேர்தல் நெருங்கும் நிலையில் அண்ணாமலையின் இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணியின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.
இதையும் படிங்க: 2 நாளுக்கு முன் டிஜிபி மாற்றம்! 23ம் தேதி முதல்வரே மாத்துறோம்!! குடும்ப அரசியல் வீழ 2026 தேர்தல் முக்கியம் - அண்ணாமலை