தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சர்ச்சை வெளியாகியுள்ளது. விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக 'உள்ளடி' வேலை பார்த்தவர்களுக்கு, முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும், மாவட்ட பொறுப்பாளருமான கவுதம சிகாமணி கொடைக்கானலில் இன்ப சுற்றுலா அழைத்துச் சென்று 'தடபுடல்' விருந்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் சிலர் கூறுகையில், “கவுதம சிகாமணி விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் நிலையில், விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளும் அவரது கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால் அவர் திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்காக பொன்முடி உள்ளிட்ட குடும்பத்தினர் முழு பலத்துடன் பிரசாரம் செய்தனர்.
அதேசமயம், விழுப்புரம் தொகுதி வேட்பாளர் லட்சுமணன் பிரசாரத்துக்கு வருமாறு அழைத்தபோது பொன்முடி செல்லவில்லை. முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், தேர்தல் பணிகளை சீரியசாக செய்யுமாறு அறிவுறுத்தியும், பொன்முடி ஆதரவாளர்களான 30 பேர் விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் ‘டிமிக்கி’ கொடுத்துவிட்டு, திருக்கோவிலூரில் மட்டும் முழு வீச்சில் வேலை செய்தனர்” என்றனர்.
இதையும் படிங்க: உதய் அண்ணாவை பார்க்கக்கூட முடியலையே! புலம்பும் நிர்வாகிகள்! ஐவரணி ஆட்டம்! மு.க.ஸ்டானிடம் பறந்த புகார்!

மேலும், கவுதம சிகாமணி மாவட்ட பொறுப்பாளரான பிறகு, கட்சியின் 15க்கும் மேற்பட்ட துணை அமைப்புகளுக்கு தனது ஆதரவாளர்களையே நியமித்ததாகவும், அவர்கள் சொந்த தொகுதிகளில் பணியாற்ற அனுமதிக்காமல் தனது தொகுதிக்கு மட்டும் வேலை செய்ய வைத்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
தேர்தல் முடிந்த பிறகு, தனக்காக திருக்கோவிலூர் தொகுதியில் உள்ளடி வேலை செய்த நிர்வாகிகளை கவுதம சிகாமணி கொடைக்கானலுக்கு இன்ப சுற்றுலாவாக அழைத்துச் சென்று, அங்கு பங்களாவில் தங்க வைத்து பிரமாண்டமான விருந்து கொடுத்து மகிழ்வித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கை, திருக்கோவிலூர் தவிர மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “மாற்றாந்தாய் மனப்பான்மை” என்று விமர்சனம் செய்யப்படும் இந்தச் செயல், கட்சிக்குள் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இது குறித்த புகார்கள் ஏற்கனவே கட்சி தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் உள் பிரச்னை அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது.
இதையும் படிங்க: ஆடியோ லீக் ஆனதால் அதிருப்தியில் ஆ.ராசா!! புறக்கணிக்கும் அறிவாலயம்! சமரசம் செய்யும் சபரீசன்!