மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் பரப்புரையின் கீழ் திமுகவில் புதிதாக 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என அறிவித்திருந்தார். அதன்படி ஜூலை 1ம் தேதி ‘ஓரணியின் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார். இந்த உறுப்பினர் சேர்க்கை பரப்புரையின் தொடக்கமாக, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்கான செயலியின் விவரங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் பயிற்சி அரங்கு இன்று காலை 10 மணியளவில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தொடங்கி நடைபெறுகிறது.
இந்நிலையில் ‘ஒரணியில் தமிழ்நாடு’பரப்புரை எதற்காக? அதன் பொருள் என்ன ? இலக்கு என்ன? என்பது குறித்து திமுக விளக்கம் அளித்திருக்கிறது. அதில், தமிழ்நாடு பண்பாடு, பொருளாதாரம், அரசியல் ரீதியாகப் பல அநீதிகளைச் சந்தித்து வருகிறது. கீழடி ஆய்வுக்கு அங்கீகாரம் அளிக்காதது, இந்தித் திணிப்பு, கல்வி நிதி மறுப்பு, கூட்டாட்சி முறையைச் சிதைப்பது, மக்கள் தொகைக் கணக்கெடுப்பைக் காலம் தாழ்த்துவது, தொகுதி மறுவரையறை என்ற பெயரில் நம் உரிமைக்குரலை நசுக்கி பிரதிநிதித்துவத்தை குறைப்பது எனத் தமிழ்நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுக் கொண்டேயுள்ளது.

நம் தமிழ்நாட்டின் பெருமையையும், மாண்பையும் சிதைக்க திட்டமிடுபவர்கள் ஒரு உண்மையை மறந்துவிட்டார்கள் - அவர்கள் அடக்க நினைப்பது சாதாரண ஒளியன்று, அது ஒரு சூரியன்! எவர் தடுத்தாலும் கதிர்கள் தடையை ஊடுருவிப் பிரகாசிக்கும் சூரியனின் குணமே தமிழ்நாட்டு மக்களின் குணம். எவ்வளவு முறை எதிரிகள் முயன்றாலும் ஒவ்வொரு முறையும் அடக்கு முறைகளைத் தகர்த்து எழுச்சியுடனும் தமிழ்நாடு எழும்! நமது வானில் ஆபத்து மேகங்கள் சூழ்ந்த போதெல்லாம், இருளை அழித்து வெற்றி வெளிச்சத்தைக் கண்டடைந்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். ஏனெனில், தமிழர்களின் வெற்றிச் சூத்திரம் ஒன்றே ஒன்றுதான் - ஆபத்து வரும்போதெல்லாம் நாம் ஒன்றிணைவோம்! நமது எதிர்ப்பின் பலம் ஒருபோதும் குன்றியதில்லை. அச்சுறுத்தப்படும்போது, நாம் ஒன்றுபடுகிறோம். ஒடுக்கப்படும்போது, நாம் வீறு கொண்டு எழுகிறோம்.
இதையும் படிங்க: பெண்களை கேவலமா பேசுறவங்களுக்கு நட்சத்திரப் பேச்சாளர் பட்டம்... திமுகவை கழுவி ஊற்றிய வானதி சீனிவாசன்!!

இதோ இப்போது தமிழ்நாடு மீண்டும் ஒருமுறை ஒன்றாய் ஓரணியில் திரண்டு நமது மண், மொழி, மானம் மீது தொடுக்கப்படும் போருக்கு எதிராகப் போராடி வெல்லத் தயாராகிறது! ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் கட்டிக் காத்து வந்த நமது மண்ணின் பெருமை இப்போது நமது இளைஞர்களின் கைகளில் உள்ளது. நமது முன்னோடிகள் நமக்காகப் போராடியது எல்லாம் எதற்காக? வெறுமனே நாம் உயிர்வாழவா? இல்லவே இல்லை. நாம் தலைநிமிர்ந்து சுயமரியாதை உணர்வோடு பெருமையுடன் வாழவே அவர்கள் போராடினர்!
இன்று, அந்தப் போராட்டத்தை முன்னெடுப்பது நமது ஒவ்வொருவரின் கடமை. நமது குழந்தைகளுக்காகவும், இனி வரவிருக்கும் நம் தலைமுறைகளுக்காகவும் நாம் ஒன்றுபடுவோம், எந்தச் சக்தியாலும் வெல்ல முடியாத, எந்தக் கூட்டத்தாலும் உடைக்க முடியாத, எந்த வல்லமையாலும் தகர்க்க முடியாத மலைபோல் எழுவோம். நாம் ஒன்றாக ஓரணியில் நின்றால், நம்மை வீழ்த்த எவராலும் முடியாது.

இதுவே ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு! வடக்கில் பழவேற்காடு முதல் தெற்கில் கன்னியாகுமரி வரை, மேற்கில் ஆனைக்கட்டி முதல் கிழக்கில் நாகப்பட்டினம் வரை, ஜாதி, மதம், அரசியல் சார்பு ஆகியவற்றைக் கடந்து ஓரணியில் நிற்கிறது தமிழ்நாடு. இது வெறும் பிரச்சாரம் அல்ல! தமிழ்நாடு, அதன் மண், மொழி, மானம் ஆகியவற்றைப் பாதுகாக்க, ஒன்றிணைந்து போராடி வெல்வதற்கான மாபெரும் முன்னெடுப்பு. ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பின் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய், நம் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ஒன்றிணைவார்கள்.
இந்தப் பரப்புரை மூலம், திமுக உறுப்பினர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் அனைத்து 100% குடும்பங்களையும் நேரில் சந்தித்து, ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுப்பர்! இதன் மூலம் குறைந்தபட்சம் 1 கோடி குடும்பங்களை ஒன்றிணைத்து, ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொருநகரத்திலும், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30% மக்களைத் திமுக உறுப்பினர்களாகப் பதிவு செய்வதே இலக்கு என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாடே கொதித்து போய் இருக்கிறது... திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!!