திமுகவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஓட்டுப்பெட்டி முறையில் உட்கட்சி தேர்தலை நடத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கட்சியின் அமைப்பை முழுமையாக மறுசீரமைத்து, தொண்டர்களின் நேரடி வாக்குகள் மூலம் நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் திட்டத்திற்கு தலைவர் மு.க. ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, கட்சியின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை விரிவாக ஆய்வு செய்ய ஸ்டாலின் 10 பேர் கொண்ட குழுவை நியமித்திருந்தார். அந்தக் குழு சமீபத்தில் தனது பரிந்துரைகளை கட்சி தலைமையிடம் சமர்ப்பித்துள்ளது. அதில், கிளை அமைப்புகள் முதல் தலைமை நிலையம் வரை கட்சியின் முழு கட்டமைப்பையும் சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட எல்லைகளை மறுவரையறை செய்து நிர்வாக அமைப்பை புதுப்பிக்கவும், இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட அனைத்து சார்பு அணிகளையும் மறுசீரமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: FIR- ல் என் பெயரை இல்ல..! எத்தனை CASE போட்டாலும் போராடத் தயார்..! செந்தில் பாலாஜி திட்டவட்டம்..!!
தேர்தல் பணிக்குழுக்களை புதுப்பித்து நிரந்தர தேர்தல் மேலாண்மை அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும், அரசியல் வியூகங்களை வடிவமைக்கும் உயர்நிலை செயல் திட்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்த பிறகு, கட்சியின் அனைத்து நிலைகளிலும் நிர்வாகிகளைத் தேர்வு செய்ய உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, போட்டி நிலவும் இடங்களில் ஓட்டுப்பெட்டி வைத்து தேர்தல் நடத்த வேண்டும் என்றும், நியமன முறையை குறைத்து தொண்டர்களின் வாக்குகள் மூலம் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து, உட்கட்சி தேர்தலை ஓட்டுப்பெட்டி முறையில் நடத்த ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக 2014ஆம் ஆண்டு திமுகவில் இத்தகைய தேர்தல் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஓட்டுப்பெட்டி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மாவட்ட மற்றும் கிளை மட்ட நிர்வாகிகள் மத்தியில் அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது.
கட்சியின் அடித்தள அமைப்புகளை வலுப்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுவதுடன், வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு திமுகவில் பெரிய அமைப்பு மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் கட்சித் தொண்டர்களிடையே உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: கர்நாடகா கேட்டை இழுத்து மூடிட்டாங்க..! அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்குமா.. நடக்காதா..? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!