காவிரி நீர் பிரச்சினையை மையமாகக் கொண்டு தமிழக அரசியலில் புதிய பரபரப்பு உருவாகியுள்ளது. தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட முடியாது என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சூழலில், அதே நாளான ஆகஸ்ட் 3-ஆம் தேதி திமுக சார்பில் தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், மேகதாது அணைத் திட்டம் குறித்து நேரில் விளக்குவதற்காக தமிழக முதல்வர் விஜயை கர்நாடகா வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து, முதல்வரின் கர்நாடக பயணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த விவகாரம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மு.க.ஸ்டாலின், தேர்தலுக்கு முன் அளிக்கப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டாமல் அரசு காலம் தாழ்த்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய் முதல்வராக இருக்கும் வரை! மேகதாது அணை கட்ட ஒரு செங்கல் கூட வைக்க முடியாது! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!



தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு உடனடியாக சிறப்பு நிவாரணத் தொகுப்பு அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள அவர், ஆகஸ்ட் 3-ஆம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சாவூரில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
மேலும், முதல்வர் விஜயின் கர்நாடக பயணம் குறித்து அரசு அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை என்றும், மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாடு தெளிவாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மாநிலத்தின் முக்கிய உரிமை பிரச்சினையில் அரசு போதுமான தீவிரம் காட்டவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையில், காவிரி நீர் பங்கீடு, மேகதாது அணைத் திட்டம் மற்றும் டெல்டா விவசாயிகளின் கோரிக்கைகள் மீண்டும் அரசியல் விவாதத்தின் மையமாக மாறியுள்ளன. ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள முதல்வரின் கர்நாடக பயணமும், திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டமும் காவிரி விவகாரத்தை மேலும் தீவிர அரசியல் விவாதமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: காவிரி, மேகதாது விவகாரம்! மு.க.ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்!