மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் என்றாலே தமிழக அரசியலில் ஒரு சிறப்பு முக்கியத்துவம் கொண்ட நாள். அந்த நாளை அதிமுக தொண்டர்கள் எப்போதும் உணர்ச்சிபூர்வமாக நினைவுகூர்வதோடு, கட்சியின் பல முக்கிய அறிவிப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படும் நாளாக இருந்து வந்துள்ளது. இந்த ஆண்டு 2026-ல் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளான இன்று அதிமுகவின் சார்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஒன்று உருவாகியுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இந்த நன்னாளில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்து வைத்திருப்பதாகவும், அதில் சில முக்கிய பெயர்கள் இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக 15 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியல் என்று பேசப்படுகிறது.

இந்த பட்டியலில் கொங்கு மண்டலம், தென் மாவட்டங்கள், டெல்டா பகுதி, வட மாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சியின் மூத்த தலைவர்கள், வலுவான அமைப்புப் பலம் கொண்டவர்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும், ஒரு சில பெண் வேட்பாளர்களும் இதில் அடங்கியிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த அறிவிப்பை ஜெயலலிதா பிறந்தநாளுடன் இணைத்து செய்வதற்கு ஒரு சிறப்பு காரணம் உண்டு.
இதையும் படிங்க: “மனம் கவர்ந்த தலைவர்; தலை சிறந்த நிர்வாகி”... ஜெயலலிதாவிற்கு புகழாரம் சூட்டிய மோடி, அமித் ஷா...!
அன்றைய நாள் வளர்பிறை அஷ்டமியாகவும் இருப்பதால், ஜோதிட ரீதியாகவும் நல்ல சகுனமாகவும் கருதப்படுகிறது. ஜெயலலிதாவே பலமுறை முக்கிய அறிவிப்புகளை தனது பிறந்தநாள் அல்லது மற்ற சிறப்பு நாட்களில் வெளியிட்டு வெற்றி பெற்ற வரலாறு உண்டு. அதே போன்று எடப்பாடி பழனிசாமியும் ஜெயலலிதா பாணியில் இந்த நகர்வை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தோன்றுகிறது. இது கட்சித் தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கும் என்றும், தேர்தல் களத்தில் அதிமுகவின் தீவிரத்தை காட்டும் என்றும் கட்சியினர் நம்புகின்றனர்.
இதையும் படிங்க: முழு சங்பரிவார் சேவகராக மாறிய EPS... அவ்ளோ விசுவாசம்..! பந்தாடிய கனிமொழி..!!