தமிழக அரசியலில் ஆட்சியமைப்பை சுற்றிய பரபரப்பு மேலும் தீவிரமடைந்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், இன்னும் ஆட்சியமைக்க முடியாத சூழலில் சிக்கித் தவித்து வருகிறது. பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை இல்லாததால், ஆளுநருடன் நடந்த விஜயின் தொடர் ஆலோசனைகள் தற்போது அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன.
தவெக தலைவர் விஜய் நேற்று தமிழ்நாடு ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் உடனடி அழைப்பு வழங்கப்படாததால், இன்று இரண்டாவது நாளாகவும் மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில், பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவு குறித்து ஆளுநர் பல முக்கிய கேள்விகளை எழுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தவெகவின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்தாலும், ஆட்சியமைக்க 118 உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில் மீதமுள்ள ஆதரவை எப்படி பெறப்போகிறீர்கள் என ஆளுநர் கேட்டதாக கூறப்படுகிறது. மேலும், விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்தால், பெரும்பான்மை எட்ட இன்னும் கூடுதல் உறுப்பினர்கள் தேவைப்படும் என்பதையும் ஆளுநர் சுட்டிக்காட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ஸ்டாலின் என்ன சொன்னார்..? விஜய்க்கு ஆதரவா..? திருமாவளவன் பேட்டி..!!
இதற்கு பதிலளித்த விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள், “ஆட்சியமைத்த பிறகு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம்” என்று உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. எந்தெந்த கட்சிகள் ஆதரவு அளிக்க தயாராக உள்ளன என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், விஜய்க்கு கடந்த மூன்று நாட்களாக வழங்கப்பட்டிருந்த முதலமைச்சர் தரத்திலான பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்காக பயன்படுத்தப்பட்டு வந்த நான்கு கான்வாய் பாதுகாப்பு வாகனங்களும் தற்போது திரும்ப பெறப்பட்டு தலைமைச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. விஜயை ஆட்சியமைக்க அழைப்பதில் தொடர்ந்து தாமதம் நீடித்து வரும் நிலையில், அடுத்த கட்டமாக என்ன முடிவு வெளியாகும் என்பதே தற்போது தமிழக அரசியலின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: "யாரை கேட்டு செஞ்சீங்க..." - தமிழக உயர் அதிகாரிகளை கிழித்து தொங்க விட்ட ஆளுநர் அர்லேகர்... விஜயால் வெடித்த சிக்கல்...!