இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு முன்னெடுப்பாக, எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணி எம்.பி.க்கள் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அவர்களை பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மான நோட்டீசில் கையெழுத்திட்டுள்ளனர். இது சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான பதவி நீக்க முயற்சியாகும்.
எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி உறுப்பினர்கள், ஞானேஷ் குமார் ஆளும் பா.ஜ.க.வுக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக, வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision - SIR) என்ற பெயரில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தகுதிவாய்ந்த வாக்காளர்களின் பெயர்கள் வேண்டுமென்றே நீக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: தலைமை தேர்தல் கமிஷனர் பதவியை பறிக்க திட்டம்?! பார்லியில் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு?!
இது பெரும் வாக்காளர் தள்ளுபடி (mass disenfranchisement) என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இதனால் தேர்தல் ஆணையத்தின் நடுநிலை கேள்விக்குள்ளாகியுள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. தற்போது, லோக்சபாவில் சுமார் 120 எம்.பி.க்களும், ராஜ்யசபாவில் சுமார் 60 எம்.பி.க்களும் இந்த பதவி நீக்க நோட்டீசில் கையெழுத்திட்டுள்ளனர்.
இது தேவையான குறைந்தபட்ச எண்ணிக்கையை (லோக்சபாவில் 100, ராஜ்யசபாவில் 50) விட அதிகம். இந்த நோட்டீசுகளை விரைவில் இரு சபைகளிலும் சபாநாயகர் மற்றும் தலைவரிடம் சமர்ப்பிக்க 'இண்டி' கூட்டணி முடிவு செய்துள்ளது.
பதவி நீக்க செயல்முறை உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நீக்கும் முறையைப் போன்றது. 'நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை' (proven misbehaviour) போன்ற காரணங்களுடன் நோட்டீஸ் அளிக்கப்பட்டால், விசாரணை குழு அமைக்கப்பட்டு ஆராயப்படும்.
ஆனால், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்.டி.ஏ.) பெரும்பான்மை இருப்பதால், இந்த தீர்மானம் நிறைவேற வாய்ப்பில்லை என்பது தெளிவு. இருப்பினும், இது தேர்தல் ஆணையத்தின் நடுநிலை மீதான விவாதத்தை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் இதை ஜனநாயகத்தை காப்பாற்றும் முயற்சி என்று கூறினாலும், ஆளும் கட்சி இதை அரசியல் சதி என்று கண்டிக்க வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: தகுதி உள்ள வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படாது! தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பிராமிஸ்!!