சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் சி.ஜோசப் விஜய் இன்று தமிழ்நாட்டின் 13ஆவது முதலமைச்சராக பதவியேற்றார். 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக தனிப்பெரும்பான்மை இல்லாததால், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கழகம் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின்னர் தவெகவைச் சேர்ந்த செங்கோட்டையன் உள்ளிட்ட 9 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
பதவியேற்பு விழா முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் உணர்ச்சி பொங்கக் கூறியதாவது, “நம்முடைய முதலமைச்சருடன் இன்று பதவிப் பிரமாணம் செய்தது என் வாழ்நாளில் நினைத்துப் பார்க்காத ஒன்று. இது இமாலய வெற்றி என்றுதான் கருதுகிறேன்” என்றார்.
இதையும் படிங்க: திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவி ராஜினாமா!! முதல்வர் விஜய் முடிவு!! விரைவில் வருகிறது இடைத்தேர்தல்!

மேலும் அவர் கூறியதாவது, “எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் பயணம் செய்திருக்கிறேன். முதலமைச்சர் விஜய்யுடன் பயணிக்கும் போதும் அதே உணர்வைப் பெறுகிறேன். இந்த அரசுக்கு என் உயிர் மூச்சுள்ள வரை உறுதுணையாக இருப்பேன்” என்று உணர்ச்சி பொங்கத் தெரிவித்தார்.
தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக, கூட்டணி ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. நடிகராக புகழ் பெற்ற விஜய், அரசியலில் நுழைந்து மிகக் குறுகிய காலத்தில் முதலமைச்சர் பதவிக்கு உயர்ந்துள்ளது தமிழக அரசியல் வரலாற்றில் தனித்துவமான சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் புதிய அரசுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு எப்படியான சாதனைகளைப் படைக்கும் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: 200 யூனிட் மின்சாரம் எல்லாருக்கும் இலவசம் இல்லை! முதல் கையெழுத்திலேயே ட்விஸ்ட் வைத்த விஜய்!! பதறும் மக்கள்!