தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 7 மணி வரை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஈரோடு மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த 3 மணி நேரத்தில்.. 11 மாவட்டங்களில்.. வானிலை மையம் அதிரடி அலர்ட்!!

முன்னதாக வெளியான அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்றும் நாளையும், லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 26 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (24-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?