ஜார்க்கண்டில் மாணவர்கள் போராட்டம் வெடிப்பு! சட்டசபையை நோக்கி தடுப்புகளை மீறி பேரணி
ராஞ்சி: ஜார்க்கண்டில் அரசு பணியாளர் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் புகாரை கண்டித்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று சட்டசபையை நோக்கி தடுப்புகளை மீறி பேரணியாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, தேர்வு முறைகேடு குறித்து சி.பி.ஐ., விசாரணை கோரி முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டை முற்றுகையிட முயன்ற பா.ஜ., எதிர்க்கட்சித் தலைவர் பாபுலால் மராண்டி உள்ளிட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா–காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக மாணவர்கள் உள்ளிட்டோர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த விவகாரத்தை கண்டித்து மாணவர்கள் ராஞ்சியில் கடந்த 25ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று அவர்களின் போராட்டம் 17வது நாளை எட்டியது.
இதையும் படிங்க: ராஞ்சியில் வெடித்த மாணவர்கள் போராட்டம்! 3 அரசு தேர்வுகளை ரத்து செய்து ஜார்க்கண்ட் அரசு உத்தரவு
இதற்கிடையே, ஜார்க்கண்ட் சட்டசபை இன்று கூடிய நிலையில், மாணவர்கள் சட்டசபையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். வழியில் போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை மீறி அவர்கள் முன்னேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்களால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க சட்டசபை மற்றும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.

மாணவர்களின் போராட்டத்திற்கு மத்தியில், தேர்வு முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பா.ஜ.,வும் போராட்டத்தில் ஈடுபட்டது. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான பாபுலால் மராண்டி தலைமையில் பா.ஜ., நிர்வாகிகள், முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டை முற்றுகையிட முயன்றனர்.
அவர்களை தடுத்து நிறுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். தொடர்ந்து பாபுலால் மராண்டி உள்ளிட்ட பா.ஜ., தலைவர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.
ஒரே நாளில் மாணவர்கள் சட்டசபையை நோக்கி பேரணி நடத்தியதும், எதிர்க்கட்சியினர் முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்றதும் ஜார்க்கண்ட் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வு முறைகேடு தொடர்பான புகார்களுக்கு சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என்பதில் பா.ஜ., தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மாணவர்களின் போராட்டமும் நீடித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் அரசு அடுத்தகட்டமாக எத்தகைய நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: நீட் vs ஜார்க்கண்ட் தேர்வு முறைகேடு! அரசியலில் வெடிக்கும் ‘இரட்டை நிலைப்பாடு’ சர்ச்சை! ராகுலுக்கு சிக்கல்!