கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, கபினி அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், தமிழகத்தை நோக்கி திறக்கப்படும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தகவல் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் காவிரி கரையோர மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த சில நாட்களாக கர்நாடகாவின் மலைப்பகுதிகள் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கே.ஆர்.எஸ்., ஹேமாவதி, ஹாரங்கி உள்ளிட்ட முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து வேகமாக அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் மட்டுமே திறக்கப்பட்ட நிலையில், நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்ததால் உபரி நீர் வெளியேற்றும் நடவடிக்கையும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
நேற்று இரவு வரை கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அணைக்கு வினாடிக்கு 31,700 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால், அணை அதன் முழு கொள்ளளவான 2,284 அடியை எட்டியுள்ளது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 27 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தண்ணீர் இல்லை என்றார்கள்! 2 நாட்களில் கபினி அணை எப்படி நிரம்பியது? காவிரி கண்காணிப்புக் குழுவை விமர்சித்த பெ.சண்முகம்!

இதனுடன், கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 32,048 கனஅடி, ஹேமாவதி அணைக்கு 12,856 கனஅடி, ஹாரங்கி அணைக்கு 11,645 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதாக கர்நாடக நீர்வளத் துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து மழை நீடித்தால், இந்த அணைகளிலும் உபரி நீர் வெளியேற்றும் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
கபினி அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள காவிரி நீர், இன்று மாலைக்குள் தமிழக எல்லையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதே நேரத்தில், இந்த நீர்வரத்து டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு சாதகமாக அமையும் என்ற நம்பிக்கையும் விவசாயிகள் மத்தியில் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் டல்லடிக்கும் ஆடிப்பெருக்கு... ஓடை போல் காட்சியளிக்கும் காவேரி... கலங்கும் மக்கள்...!