காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை கைவிடக் கோரி, கடந்த இரண்டு நாட்களாக கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 34 மேற்பார்வையாளர்கள் மீது டாஸ்மாக் நிர்வாகம் பணியிடைநீக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு மதுபானக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதல் விலை வைத்து விற்பனை செய்ததாகக் கூறப்படும் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களை டாஸ்மாக் நிர்வாகம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பணியிடைநீக்கம் செய்திருந்தது. அந்த வகையில், காஞ்சிபுரத்திலும் 10-க்கும் மேற்பட்டோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தால், பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கும், அதேபோல் காலி பாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்கும் தனிநபர்களை பணியமர்த்த வேண்டிய நிலை ஏற்படுவதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடையடைப்பு... போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..! சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம்..!!
மேலும், காலி மதுபாட்டில்களைச் சேமித்து வைக்க இடத்தை வாடகைக்கு எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதாகவும், இதனால் ஏற்படும் கூடுதல் செலவினத்தை தாங்களே செய்ய வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் கடந்த இரண்டு நாட்களாக மூடி, டாஸ்மாக் ஊழியர்கள் மண்டல அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, நேற்று இரவு ஊழியர்கள் பணிக்குத் திரும்பியிருந்தனர்.
இந்த நிலையில், காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தைக் கைவிடக் கோரி கடந்த இரண்டு நாட்களாக கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 34 டாஸ்மாக் ஊழியர்கள் மீது பணியிடைநீக்க நடவடிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: கொட்டிக் கொடுத்தும் பத்தலையா?... டாஸ்மாக் கடைகளில் 10 ரூபாய் வசூல் வேட்டை படுஜோரு... அமைச்சர் விக்னேஷுக்கு புது தலைவலி...!