கர்நாடக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அமைச்சரவை துறை ஒதுக்கீடு தொடர்பான அதிருப்தியால் மூத்த காங்கிரஸ் தலைவர் ராமலிங்க ரெட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த மே 28-ஆம் தேதி கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா பதவி விலகியதைத் தொடர்ந்து, மாநிலத்தின் புதிய முதலமைச்சராக டி.கே. சிவக்குமார் பொறுப்பேற்றார். இதையடுத்து அவரது தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டு, 13 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டன.
புதிய அமைச்சரவையில் டி.கே. சிவக்குமார் நிதி, அமைச்சரவை விவகாரங்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளை தக்க வைத்துக் கொண்டார். துணை முதல்வர் டாக்டர் ஜி. பரமேஸ்வராவுக்கு வருவாய் மற்றும் விளையாட்டுத் துறைகள் வழங்கப்பட்டன. அதேபோல் பிரியங்க் கார்ஜேவுக்கு உள்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரித்தொழில்நுட்பத் துறைகள் ஒதுக்கப்பட்டன.
இதையும் படிங்க: கர்நாடக முதலமைச்சர் என்னவோ சிவக்குமார் தான்!! ஆனா அமைச்சரவை கண்ட்ரோல் சித்தராமையா கையில்!

இந்த நிலையில், ராமலிங்க ரெட்டிக்கு பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத் துறை வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும், தமக்கு வழங்கப்பட்ட துறையில் அவர் திருப்தி அடையவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை அவர் எடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜினாமாவை அறிவித்த ராமலிங்க ரெட்டி, தாம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகப் போவதில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். கட்சியின் மீது எந்தவித அதிருப்தியும் இல்லை என்றும், தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்களுக்கு சேவை செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் புதிய அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அமைச்சரவை துறை ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்டுள்ள இந்த அதிருப்தி, மாநில அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமலிங்க ரெட்டியின் ராஜினாமா குறித்து காங்கிரஸ் மேலிடம் என்ன முடிவு எடுக்கிறது என்பதையும், அமைச்சரவையில் மேலும் மாற்றங்கள் ஏற்படுமா என்பதையும் அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இதையும் படிங்க: கர்நாடக முதல்வர் சிவக்குமார்! துணை முதல்வர் பரமேஸ்வரா!! போட்டோ போட்டு அறிவித்தார் சித்தராமையா!