தவெக தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றிருக்கிற நிலையில், கடந்த ஆட்சியில் திமுகவால் கொண்டு வரப்பட்ட கலைஞர் உரிமைத் தொகை திட்டம் தொடருமா? என்ற எதிர்பார்ப்பு நீடித்து வந்த நிலையில், இன்று வழக்கம் போல் வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழ்நாட்டில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக சாமானிய, கிராமப்புற மக்கள் மத்தியில் பணப்புழக்கத்தை கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.31. கோடி பயனாளிகளுக்கு கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் ரூ.5,000 தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான தலா ரூ. 1000 பணமும், ரூ. 2000 கோடைக்கால சிறப்புத் தொகையும் முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டது.
அதன்பின்னர் தேர்தலில் வெற்றி பெற்று தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் ஆன நிலையில், மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் வழங்கப்படுமா? அல்லது விஜய் அறிவித்தது போல் மாதம் 2500 ரூபாய் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால், திட்டத்தை சீரமைக்க விஜய் கால அவகாசம் கோரியிருந்த விஜய், முந்தைய அரசு கொண்டு வந்த நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.
நேற்றைய தினம் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் நிதி விடுவிக்கப்பட்டிருந்தது. மாணவர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி அன்று மகளிர் வங்கிக் கணக்குகளில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையான 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் இன்றும் 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுமா? என மகளிர் காத்திருந்தனர்.
தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த 1 கோடியே 31 லட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளில் வழக்கம் போல் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1000 ரூபாயானது வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவினாலும், விஜய் வாக்குறுதி கொடுத்தபடி 2500 ரூபாய் வழங்காதது சற்றே ஏமாற்றத்தை அளித்துள்ளது.