மேற்கு வங்காள முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, கொல்கத்தாவின் பவானிபூர் தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்காள சட்டப்பேரவைத் தேர்தலில், முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23 அன்றும், இரண்டாவது கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29 அன்றும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பவானிபூர் இரண்டாவது கட்ட தேர்தல் தொகுதியாகும்.
பவானிபூர் மம்தாவின் பாரம்பரிய வலிமை மிக்க தொகுதியாகக் கருதப்படுகிறது. இங்கு அவரை எதிர்த்து பாஜகவின் மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். இந்தப் போட்டி மேற்கு வங்காள அரசியலில் மிகப் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பவானிபூர் மற்றும் நந்திகிராம் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டார். நந்திகிராமில் சுவேந்து அதிகாரியிடம் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தார். அதன் பிறகு பவானிபூரில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகத் தொடர்ந்தார்.
இதையும் படிங்க: பாஜக ஆட்சிக்கு வந்தால் மீனு கூட சாப்பிட முடியாது!! உணவு அரசியலை புகுத்திவிடும்!! மம்தா நேரடி தாக்கு!!

இந்த முறை சுவேந்து அதிகாரி நந்திகிராம் மற்றும் பவானிபூர் ஆகிய இரு தொகுதிகளிலும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது மம்தாவின் சொந்த தொகுதியில் நேரடி சவாலாக அமைந்துள்ளது. பாஜகவின் இந்த உத்தி, திரிணமூல் காங்கிரஸுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவேந்து அதிகாரி முன்னாள் திரிணமூல் தலைவராக இருந்தவர் என்பதால், இருவருக்கும் இடையிலான போட்டி தனிப்பட்ட மற்றும் அரசியல் எதிர்ப்பு நிறைந்ததாக உள்ளது.
மம்தா பானர்ஜி பவானிபூரில் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, திரிணமூல் தொண்டர்கள் பெரும் உற்சாகத்துடன் கூடியிருந்தனர். “பங்கா நிஜேர் மேயேகேய் சாய்” (வங்காளம் தன் மகளையே விரும்புகிறது) போன்ற முழக்கங்கள் எழுந்தன. மறுபுறம், சுவேந்து அதிகாரி தனது வேட்பு மனு தாக்கலின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் இருந்தார். பாஜக இந்தத் தொகுதியை மிக முக்கியமான போர்க்களமாகக் கருதுகிறது.
மேற்கு வங்காளத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைக்க முயலும் நிலையில், பாஜக வலுவான எதிர்ப்பை உருவாக்க முயற்சிக்கிறது. பவானிபூர் போட்டி மாநிலம் முழுவதும் உள்ள தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இரு தரப்பும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன. மமதாவின் அனுபவமும், சுவேந்துவின் ஆக்ரோஷமான அணுகுமுறையும் மோதும் இந்தப் போட்டி, 2026 மேற்கு வங்காளத் தேர்தலின் மைய அம்சமாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: போர் பதற்றம் தொடர்ந்தாலும் ரெப்போ வட்டியில் மாற்றமில்லை!! 5.25% தொடரும் என ரிசர்வ் பேங்க் கவர்னர் அறிவிப்பு!