நீட் தேர்வு தொடர்பான போராட்டங்களில் ஈடுபட்ட தமிழக மாணவர்களுக்கு முக்கிய நிவாரண அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீட் தேர்வை எதிர்த்து போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் முதல்வர் விஜய் உத்தரவின்படி ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்தியது. இந்த போராட்டம் பின்னர் பல மாநிலங்களுக்கும் பரவிய நிலையில், தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சாலை மறியல் நடைபெற்றன.
அரசியல் அமைப்புகளுடன் இணைந்து மாணவர் அமைப்புகளும் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்தன. குறிப்பாக சென்னையில் நடைபெற்ற சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவங்கள் அப்போது மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தின.
இதையும் படிங்க: "என்னையும் என் தாயையும் இழிவாக பேசினார்கள்... ஆனாலும் மன்னிக்கிறேன்!" – பிரதமர் மோடி உருக்கம்!

இதற்கிடையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நீட் தொடர்பான போராட்டங்கள் படிப்படியாக முடிவுக்கு வந்தன. அதனைத் தொடர்ந்து, போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் பல்வேறு தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டது.
இந்த சூழலில் பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"நீட் தேர்வை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் முதல்வர் விஜய் உத்தரவின்படி ரத்து செய்யப்படுகின்றன. இதர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்."
இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், வழக்குகள் திரும்பப் பெறப்படும் நடைமுறை, அதற்கான அரசாணை மற்றும் எந்தெந்த வழக்குகள் இதில் இடம்பெறும் என்பது தொடர்பான விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வினாத்தாள் கசிவுக்கு இனி கடும் தண்டனை... 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம்! ராஜ்யசபாவில் மசோதா தாக்கல்!