புதுச்சேரியில் வரும் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஆளும் என்ஆர் காங்கிரஸ்–பாஜக கூட்டணி தொடரும் என உறுதியாகியுள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே பிரதமர் நரேந்திர மோடியை வரவழைத்து, மத்திய–மாநில அரசுகள் சார்பில் மெகா திட்ட அறிவிப்புகளை வெளியிடும் பிரம்மாண்ட விழா நடத்த பாஜகவினர் தீவிர ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
முதலில் இன்று என அறிவிக்கப்பட்ட பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகை, பின்னர் 14, 16, 21 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், வில்லியனூரில் நடந்த அரசு விழா ஒன்றில் பங்கேற்ற முதல்வர் என். ரங்கசாமியிடம் செய்தியாளர்கள் மோடி வருகை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “பிரதமர் மோடி மார்ச் 1-ம் தேதி புதுச்சேரி வருகிறார்” என உறுதிப்படுத்தினார்.
மோடி வருகை உறுதியானதும், என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் பங்கேற்கும் மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களை ஒன்றாக அமர்த்தி, வலுவான ஒற்றுமை படத்தை வெளிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்தி முடிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: அமித்ஷா சந்திப்புக்கு பின் அதிரடி மாற்றம்! கை கோர்க்கிறார் ஜோஸ் சார்லஸ்! பாஜ - ல.ஜ.க கூட்டணி?!

புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டசபை தொகுதிகள் உள்ளன. என்ஆர் காங்கிரஸ்–பாஜக கூட்டணி கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதால், இம்முறையும் அதே உற்சாகத்தில் களமிறங்கியுள்ளது. மோடியின் வருகையால் மத்திய நிதி உதவி, புதிய திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பெரும் அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்டவை இந்த விழாவை கவனமாக கண்காணித்து வருகின்றன. பிரதமர் மோடியின் மேடை பேச்சு மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் ஒருங்கிணைப்பு, 2026 தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. மார்ச் 1 அன்று புதுச்சேரி முழுவதும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: த.வெ.க. புதுச்சேரியில் போட்டியிடுமா? விசில் சின்னம் கிடையாதா? விஜய் ப்ளானில் புது ட்விஸ்ட்!