மதுரை திருப்பரங்குன்றத்தில் இன்று நடைபெற்ற தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், திமுக தலைமையையும் அமைச்சர்களையும் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி உறவில் திமுக காட்டும் அலட்சியம் காங்கிரஸ் தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதை அவரது பேச்சு உறுதிப்படுத்தியது.
கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய மாணிக்கம் தாகூர், திமுகவினரின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தார். “தமிழகத்தில் 2016 முதல் திமுகவுடன் கூட்டணி தொடர்கிறது. ஆனால், தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச குழு அமைக்கக்கூட 70 நாட்களாகக் காத்திருக்கிறோம். 'வந்தால் வரட்டும், போனால் போகட்டும்' என அமைச்சர்கள் பேசுவது பெரும் வலியைத் தருகிறது. நீங்கள் செய்த தவறுகளுக்காகப் பலியைச் சுமந்தவர்கள் நாங்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். எங்களுக்குப் பணம் கம்மியாக இருக்கலாம், ஆட்கள் கம்மியாக இருக்கலாம்; ஆனால் எங்கள் ஆதரவு இல்லாமல் நீங்கள் அரியணை ஏறி இருக்க முடியாது.”
“நான் மீண்டும் விருதுநகர் தொகுதியில் எம்பி-யாக நிற்கப்போவதில்லை. நான் பதவிக்காகக் கட்சிக்கு வரவில்லை; சாகும் வரை காங்கிரஸ்காரனாகவே இருப்பேன்” என அதிரடியாக அறிவித்தார். காங்கிரஸ் கட்சியின் லட்சியமே மதுரை வடக்கு தொகுதிதான் என்றும், இது குறித்து அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “விவசாயிகளை அமெரிக்காவிடம் விற்றுவிட்டார் மோடி!” எம்பி மாணிக்கம் தாகூர் கடும் குற்றச்சாட்டு!
காங்கிரஸ் கட்சியை இழிவாகப் பேசிய திமுக மாவட்டச் செயலாளர் தளபதி மற்றும் அமைச்சர்கள் மீது முதல்வர் ஸ்டாலின் இதுவரை நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டார். “எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால் நாங்களும் திருப்பிப் பேசுவோம், திருப்பி அடிப்போம்” என எச்சரித்தார்.
செயற்குழுவின் போது சில நிர்வாகிகள் ‘விஜய் தலைமையிலான தவெக-வுடன் கூட்டணிக்குச் செல்வோம்’ எனத் தெரிவித்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர் கூறியாதவது,
“நாங்கள் மற்ற கட்சிகளைப் போல இண்டிகேட்டர் போட்டு வலது பக்கம் திரும்பவில்லை நாங்கள் தேசிய கட்சி; எங்களுக்கு நெறிமுறைகள் உள்ளன. இந்தியா கூட்டணியில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். வரும் 22-ஆம் தேதி குழு அமைப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்; உரிய மரியாதை கிடைக்கும் என நம்புகிறோம். பாஜக அரசை எதிர்த்து நிற்கும் தைரியம் காங்கிரசுக்கு மட்டுமே உள்ளது என்று குறிப்பிட்ட அவர், ராகுல் காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தார். மேலும், காமராஜர் மற்றும் கக்கன் வழியில் வந்த காங்கிரஸ்காரர்கள் யாரிடமும் கமிஷன் கேட்பதில்லை என்றும், சுயமரியாதையே தங்களுக்கு முக்கியம் என்றும் அவர் சூளுரைத்தார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக-காங்கிரஸ் இடையேயான இந்த மோதல் போக்கு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையின் புதிய அடையாளமான மத்திய கைலாஷ் மேம்பாலம்: தமிழர்களின் கலை பொக்கிஷங்கள்!