தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் தற்போதுதான் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று இபிஎஸ் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார். தொடர்ந்து இன்று கூட்டணி கட்சி தலைவர்களும் அங்கே சென்று அவரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கூட்டணியில் இறுதி முடிவை எடுப்பது யார்? கூட்டணியில் என்ன நிலவுகிறது என்பது தொடர்பான பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கின்றன.
கூட்டணி இறுதி வடிவம் பெறும் நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக பல்வேறு இழுபறிகள் நீடித்து வருகின்றன. பாமக ஏற்கனவே 18 தொகுதிகள் என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தினகரன் தலைமையிலான அமமுக, 10 தொகுதிகளுக்குள் இடம் பெற விரும்புகிறது. பாஜக, காங்கிரஸ் திமுக கூட்டணியில் பெற்றுள்ள 28 தொகுதிகளை விட குறையாமல், குறைந்தபட்சம் 29 தொகுதிகள் வேண்டும் என வலியுறுத்துகிறது. மேலும், தென் மற்றும் மேற்கு மண்டலங்களில் ஆதிமுக வலுவாக உள்ள தொகுதிகள், குறிப்பாக கோவில் நகரங்கள் போன்ற பகுதிகளை குறிவைத்து பாஜக கேட்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாதாரணமாக, கூட்டணி தலைமைக்கட்சி தான் இத்தகைய முரண்பாடுகளை சரிசெய்யும். ஆனால் இங்கு, ஆதிமுக தலைமையிலான கூட்டணி என்றாலும், முக்கிய முடிவுகள் டெல்லியில் எடுக்கப்படுகின்றன என்ற பார்வை உருவாகியுள்ளது. இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே ஒருமுறை டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்துள்ளார். தற்போது இரண்டாவது முறையாகவும் அவர் டெல்லி சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. கூட்டணி கட்சிகள், அதிமுக வழங்கும் தொகுதிகளை ஏற்க மறுக்கும் சூழ்நிலையில், அதுகுறித்து ஆலோசிக்கவே அவர் டெல்லி சென்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: NDA கூட்டணிக்குள் இழுபறி... விடிந்ததுமே இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு... முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு...!
அதிமுக தரப்பு, இது ஆதிமுக தலைமையிலான கூட்டணி என்று வலியுறுத்தினாலும், பாஜக தரப்பில் இது தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) என்ற நிலைப்பாடு தெளிவாக வெளிப்படுகிறது. இதனால், தமிழகத்தில் திமுகக்கு எதிராக நிற்கும் கூட்டணி — அதிமுக தலைமையிலானதா? அல்லது NDA தலைமையிலானதா? என்ற அரசியல் குழப்பம் நீடிக்கிறது.
இதனிடையே இன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்புகளை எகிறவைத்துள்ளது. அங்கு வைத்து கூட்டணி கட்சி தலைவர்களிடம், “அனைவரும் இணைந்து ஒற்றுமையாக பணியாற்றுங்கள். திமுகவை தோற்கடிப்பது ஒன்றே நமது இலக்கு. எனவே எடப்பாடி பழனிசாமி ஒதுக்கீடு செய்யும் தொகுதிகளை பெற்றுக்கொள்ளுங்கள்” என அமித் ஷா அட்வைஸ் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவை பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு செயல்பாடுகளும் அவர்கள் கூறப்பது போல் தேசிய ஜனநாயக கூட்டணிதான் முதன்மையில் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. தற்போது நடக்கின்ற இறுதிகட்ட கூட்டணி பேச்சு வார்த்தை கூட அமித் ஷா சொல்வதை போலவே நிறைவு பெறப்போகிறது என்பதால், இது அதிமுக தலைமையிலான கூட்டணி அல்ல, அமித் ஷா தலைமையிலான கூட்டணி என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
வரும் 25ஆம் தேதி ஆதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். இந்த வாரத்திற்குள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு முழுமையாக முடிவடையும் வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: இபிஎஸ் தலையில் இறங்கியது பேரிடி...ஓபிஎஸ் திமுகவில் ஐக்கியம்... பின்னணியில் பாஜக...!