பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் பாமக கட்சி தைலாபுரம், பனையூர் என இரண்டாக உடைந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அன்புமணி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன்வைத்தார்.

அன்புமணி ஆதரவாளரான திலகபாமாவை கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்து அவர் தொடர்ந்து குரல் எழுப்பி வந்த நிலையில் ராமதாசையும் வசைப்பாடி வந்தார். இதனால் கடும் கோபத்தில் இருந்த ராமதாஸ் தற்போது திலகபாமாவை கட்சி பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.
இதையும் படிங்க: என் அம்மா தான் எனக்கு எல்லாம்.. அவ்ளோ பிடிக்கும்.. தந்தையின் குற்றச்சாட்டிற்கு அன்புமணி மறுப்பு..!
இந்த நிலையில், பாமகவின் பொருளாளராக திலகபாமா தொடர்வார் என்று அன்புமணி அறிவித்துள்ளார். பொருளாளர் பொறுப்பில் இருந்து திலகபாமாவை ராமதாஸ் நீக்கிய நிலையில் பதவியில் அவர் தொடர்வார் என்று அன்புமணி பதிலடி அறிக்கையை வெளியிட்டு, பாமக நிர்வாகிகள் அனைவரும் திலகபாமாவிற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

தந்தை மகன் மோதலால் பாமக இரண்டாக உடைந்துள்ளது. பாமகவின் நிர்வாகங்களை தைலாபுரத்தில் ராமதாஸ் ஒரு பக்கம் அறிவிக்க, பனையூர் அலுவலகத்தில் இருந்து பதில் அறிவிப்புகளை அன்புமணி வெளியிடுகிறார். இப்படி மாறி மாறி நிர்வாகிகளை நியமித்து வருவதால் பாமக இரண்டாக உடைந்து தொண்டர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பாமகவில் இருந்து நிர்வாகிகளை நீக்கவோ, நியமிக்கவோ தலைவரான எனக்கே முழு அதிகாரம் உள்ளது நிறுவனருக்கு அந்த அதிகாரம் இல்லை என அன்புமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணிக்கு ஆதரவாக கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி தனது எக்ஸ் தள பக்கத்தில், அண்ணா எவ்வழியோ.... அதுவே என் வழி!! என்று பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில்,
கோவையில் அனைத்து பொறுப்பாளர்களும் அன்புமணி அண்ணா பின்னால் நிற்போம்!!
10 வருடங்களாக அரசியலில் அண்ணாவுடன் சேர்ந்து பயணித்து வருகிறேன், ஒருமுறை கூட திட்டியோ, கடுஞ்சொல் பேசியோ நான் பார்த்ததில்லை. மிகவும் பக்குவமானவர்!!

இந்த பிரச்சனையின் போதும், ஒவ்வொரு முறை பேசும் போதும்.... "அய்யா தான் எல்லாம், அவர்தான் நம் சாமி" என்று தான் பேசி வந்தார். ஒரு முறை கூட ஐயாவை விட்டுக் கொடுக்கவில்லை. மிக மிக நிதானமாகவும், பக்குவமாகவும் இந்த பிரச்சினையை கையாண்டார்.
என்னைப் போன்ற பல இளைஞர்களை உருவாக்கியவர் அன்புமணி அண்ணா. படித்த திறமையான தொலைநோக்குப் பார்வை உள்ள தலைவர்!! என்ன ஆனாலும் அன்புமணி அண்ணா பின்னால் தான் நிற்பேன்...
இவ்வாறு அசோக் ஸ்ரீநிதி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஊருக்கு நடுவே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க துடிப்பது ஏன்? அன்புமணி சரமாரி கேள்வி..!