பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸுக்கும், அன்புமணிக்கு இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இதனால் பாமக கட்சி தைலாபுரம், பனையூர் என இரண்டாக உடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், நான் என்ன தவறு செய்தேன் என்ற அன்புமணியின் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக கருத்துகளை எடுத்துரைத்தார். அன்புமணி தான் தவறு செய்தவர். தவறான ஆட்டத்தை ஆட துவங்கி முதலில் அடித்து ஆடியதும் அன்புமணி தான். நான் போகிற போக்கில் எதையும் சொல்லவில்லை ஆதாரபூர்வமாக தான் அனைத்தையும் சொல்கிறேன்.

பாண்டிச்சேரி பொதுக்குழுவில் மேடை நாகரிகமும், சபை நாகரிகமும் இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என நடந்து கொண்டது யார்? வீட்டில் எனக்கு உதவியாகவும், கட்சியில் அன்புமணிக்கு உதவியாகவும் இளைஞர் அணி தலைவராக முகுந்தனை நியமித்து அறிவிப்பு வெளியிட்டேன். சுவற்றில் வீசிய பந்து போல உடனே மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தது சரியான செயலா? மேடை நாகரிகம் சிறிதுமின்றி அனைவரின் முன்பும் காலை ஆட்டிக் கொண்டிருந்ததும், மைக்கை தூக்கி என் தலையில் போடாத குறையாக டேபிளில் வீசியது சரியான செயலா? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
இதையும் படிங்க: ஊருக்கு நடுவே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க துடிப்பது ஏன்? அன்புமணி சரமாரி கேள்வி..!

மேலும் தான் செய்த தவறுகளை மறைத்து மக்களை அன்புமணி திசை திருப்புவதாகவும், மேடை நாகரிகம், சபை நாகரிகத்தை கடைப்பிடிக்காதவர் அன்புமணி என்றும் கூறிய ராமதாஸ், அனைவரும் பெற்ற தாயை கடவுள் என்போம். இந்தாண்டு பொங்கல் சமயத்தில் குடும்பத்துடன் அனைவரும் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது உனது இரண்டாவது மகளை இளைஞர் அணி தலைவராக்கி இருந்தால் நீ சும்மா தானே இருந்திருப்பாய்? என அன்புமணியின் தாயார் கேட்டபோது, அமர்ந்திருந்த இடத்தில் இருந்த பாட்டிலை தூக்கி பெற்ற தாயின் மீது வீசியவர் அன்புமணி, நல்ல வேலையாக அது அவரின் மேல் படாது சுவற்றில் பட்டது. இதெல்லாம் வெறும் சேம்பிள் தான். இது பொங்கல் நேரத்தில் தைலாபுரம் தோட்டத்தில் நடந்தது எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் தந்தை ராமதாஸின் இந்த குற்றச்சாட்டிற்கு அன்புமணி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தது என் அம்மா தான்; அவர் மீது சிறு துரும்புக் கூட பட விடமாட்டேன் என மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் பேசிய அன்புமணி, பாமகவில் சில குழப்பங்கள் நிலவுகின்றன, அவை விரைவில் சரியாகும் என்று கூறியதோடு, இப்போதுதான் சில விஷயங்களில் சுதந்திரமாக செயல்படுகிறேன்; தயங்காமல் தைரியமாக செல்லுங்கள், தைரியமாக பணியாற்றுங்கள், களம் நம்முடையது என்று உற்சாகமாக பேசினார்.

பாமக கட்சியில் இருந்து பொருளாளர் திலகபாமா, விழுப்புரம் செயலாளர் மயிலம் சிவக்குமார் நீக்கப்பட்டதாக ராமதாஸ் அறிவித்த நிலையில், பாமகவில் இருந்து நிர்வாகிகளை நீக்கவோ, நியமிக்கவோ தலைவரான எனக்கே முழு அதிகாரம் உள்ளது நிறுவனருக்கு அந்த அதிகாரம் இல்லை என அன்புமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கட்சி என்றால் கொஞ்சம் கோஷ்டி இருக்கத் தான் செய்யும்! பூதாகரமாகிறதா அன்புமணி பிரச்னை? ராமதாஸ் ஓபன் டாக்!