அசாம் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அசாமில் கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வரும் முழு குறிக்கோளுடன் இறங்கியுள்ளார்.
வேட்பாளர் தேர்வு மற்றும் பிரசார வியூகங்களை தானே நேரடியாக கவனித்து வருகிறார். ஆனால், அவருக்கு இடி மேல் இடியாக இரண்டு பெரிய தலைவர்கள் பா.ஜ.வுக்கு தாவியுள்ளனர்.
அசாம் காங்கிரஸ் எம்.பி. பிரதியுத் பொர்தோலி திடீரென கட்சியிலிருந்தும், எம்.பி. பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.வில் இணைந்தார். மேலும், திஸ்பூர் சட்டசபைத் தொகுதியில் பா.ஜ. வேட்பாளராகவும் அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: கம்பி நீட்டிய காங்., எம்பி! கட்சி மாறவும் திட்டம்! அடுத்தடுத்த திருப்பத்தில் அசாம் தேர்தல்!
இவரது மகன் பிரதீக் மார்கரெட்டா, அதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். தந்தை பா.ஜ.வுக்கு சென்றதை அடுத்து, மகன் “நான் போட்டியிடப் போவதில்லை” என்று அறிவித்துவிட்டார்.

இதேபோல், அசாம் காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவர் திவ்யஜோதி தாலுக்தாரும் பா.ஜ.வில் இணைந்துள்ளார். தன் மாநிலத்தில் இப்படி ஒரு பின்னடைவு ஏற்பட்டிருப்பது பிரியங்காவுக்கு பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அசாமில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.வுக்கு முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமை தாங்கி வருகிறார். அவரும் முன்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து பா.ஜ.வுக்கு வந்தவர்தான். முதல்வர் சர்மா, காங்கிரஸ் தலைவர்களை தொடர்ந்து தன் பக்கம் இழுத்து வரும் முயற்சியில் தீவிரமாக உள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி அதிகம் கவலைப்படவில்லை எனக் கூறப்படுகிறது. “யார் போக வேண்டுமோ போகட்டும், மக்கள் நம்முடன் தான் இருக்கிறார்கள்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் காங்கிரஸ் தலைவர்கள், “அமித் ஷா தேர்தல் நேரத்தில் பணத்தைப் பயன்படுத்தி தலைவர்களை விலைக்கு வாங்குகிறார். இதே உத்தியைத்தான் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ. பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்கிறது” என குற்றம் சாட்டுகின்றனர்.
பிரியங்கா காந்தியின் தீவிர முயற்சிகள் இருந்தபோதிலும், அசாமில் காங்கிரஸுக்கு கடும் சவால் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கம்பி நீட்டிய காங்., எம்பி! கட்சி மாறவும் திட்டம்! அடுத்தடுத்த திருப்பத்தில் அசாம் தேர்தல்!