புதுச்சேரி அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமையிலான என்ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி தொடரும் நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் தனி கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளார். புதுவையில் என்ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி தொடரும் என்று அறிவித்த அதே நேரத்தில், தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க.) கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 14-ஆம் தேதி காரைக்காலுக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பிறகு இந்த முடிவை ரங்கசாமி அறிவித்தார். இதையடுத்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. என்ஆர்.காங்கிரஸ் கடந்த தேர்தலில் போட்டியிட்ட 16 தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் தொடர உள்ளது. சில தொகுதிகளில் மாற்றம் இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா இன்று புதுவைக்கு வந்தார். திலாசுப்பேட்டையில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமியின் இல்லத்தில் அவரை சந்தித்தார். இந்த சந்திப்பு வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.
இதையும் படிங்க: மார்ச் 1ல் மோடி விசிட்! கூட்டணி பேச்சுவார்த்தை ஜரூர்! தமிழ்நாடு மட்டுமல்ல புதுச்சேரியிலும் களைகட்டும் தேர்தல்!

சந்திப்பின்போது ரங்கசாமி, புதுவையில் என்ஆர்.காங்கிரஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடரும் என்றும், தமிழகத்தில் த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளோம் என்றும் தெளிவுபடுத்தினார். இதை கட்சி தலைமையிடம் தெரிவிப்பதாக சுரானா கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
புதுவையை ஒட்டிய தமிழக மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் ரங்கசாமிக்கு கணிசமான செல்வாக்கு உள்ளது. இந்த பகுதிகளில் அவரது சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் என்ஆர்.காங்கிரஸ் கால் பதிக்கும் என்று ரங்கசாமி அறிவித்திருந்தார். இந்த மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் அவரை அடிக்கடி சந்தித்து வருகின்றனர்.
இதனடிப்படையில் தமிழகத்தில் த.வெ.க.வுடன் கூட்டணி என்ற முடிவை ரங்கசாமி எடுத்துள்ளார். மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு கூட்டணி அமைப்பது அரசியலில் புதிதல்ல. 2001 தேர்தலில் அதிமுக தலைமையில் காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்தபோது, புதுவையில் அதிமுக-பாமக தனி கூட்டணியும், காங்கிரஸ் தனியாகவும் போட்டியிட்டது. இதே போன்று தற்போது புதுவைக்கு ஒரு கூட்டணியும், தமிழகத்துக்கு தனி கூட்டணியும் என்று ரங்கசாமி முடிவு செய்துள்ளார்.
இந்த முடிவு தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. த.வெ.க.வுடனான கூட்டணி தமிழகத்தில் புதிய அரசியல் சமன்பாட்டை உருவாக்குமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும்.
இதையும் படிங்க: அமித்ஷா சந்திப்புக்கு பின் அதிரடி மாற்றம்! கை கோர்க்கிறார் ஜோஸ் சார்லஸ்! பாஜ - ல.ஜ.க கூட்டணி?!