பொன்னேரியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, முதல்வர் மு.க. ஸ்டாலின் பெயரை ஒரு முறை கூட உச்சரிக்காமல் பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
27 நிமிடங்கள் நீடித்த தனது உரையில் ராகுல் காந்தி, தமிழக மக்கள் மீதும் தமிழ் மொழி மீதும் தனக்கு உள்ள அளவுகடந்த அன்பை வெளிப்படுத்தினார். “தமிழகத்துக்கு வருவது எப்போதும் எனக்கு பெருமை. என் இதயத்தில் தமிழக மக்களுக்கு முக்கிய இடம் உள்ளது” என்று கூறிய அவர், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மீது கடுமையான தாக்குதல் நடத்தினார்.
ராகுல் பேசுகையில், “இப்போது இருப்பது அதிமுக முகமூடி தான். அதிமுக என்ற கட்சி ஒன்றே தமிழகத்தில் இல்லை. பாஜகவின் உண்மை முகத்தை மறைக்கும் முகமூடியாக அதிமுக மாறிவிட்டது” என்று கூறினார். பாஜக தமிழ் மொழி, தமிழ் கலாசாரம் மற்றும் தமிழர்களின் உரிமைகளை அழிக்க முயற்சிப்பதாகவும், தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க முயன்றதாகவும் அவர் விமர்சித்தார்.
இதையும் படிங்க: திமுக தோற்கணும்னு ராகுல்காந்தியே ஆசைப்படுறாரு!! அதான் தமிழ்நாட்டுக்கே வரல!! கொளுத்தி போடும் அண்ணாமலை!

“பிரதமர் மோடியும் அமித் ஷாவும் தமிழகத்தை டெல்லியில் இருந்து ஆள விரும்புகின்றனர். தமிழக முதல்வர் தங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்று எண்ணுகின்றனர்” என்று குற்றம் சாட்டிய ராகுல், தமிழர்களின் குரலை ஒடுக்க முயற்சிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று உறுதியளித்தார்.
ஆனால் இந்த முழு உரையிலும் முதல்வர் ஸ்டாலின் பெயரை அவர் ஒரு முறை கூட குறிப்பிடவில்லை. இது கூட்டணிக் கட்சிகளுக்குள் உள்ள உறவு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
முன்னதாக பேசிய கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார், “திமுக-காங்கிரஸ் கூட்டணி 40 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. ராகுலை பிரதமராக முன்மொழிந்த ஸ்டாலினுக்கு நன்றி” என்று கூறினார். ஆனால் ராகுலின் பேச்சில் ஸ்டாலின் பெயர் இல்லாதது கவனத்தை ஈர்த்தது.
ராகுல் தமிழக மக்களை திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். பாஜகவுக்கு எதிராக தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவரது பேச்சு, பொன்னேரியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள இந்த கட்டத்தில், ராகுல் காந்தியின் பேச்சு மற்றும் ஸ்டாலின் பெயரைத் தவிர்த்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: ராகுல் காந்தியும் வரல!! தேர்தல் காசும் வரல!! திமுக - காங் நிர்வாகிகள் அப்செட்!