தூத்துக்குடி மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் சரத்குமார் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார்: அப்போது, பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும், எந்த கருத்துக்களை மக்களிடையே எடுத்து செல்ல வேண்டும் என்ற கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்து இருப்பது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. அவர் தி.மு.க. கூட்டணியில் இணைந்து இருப்பதால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. மத்தியில் சிறந்த ஆட்சி நடந்து கொண்டு இருக்கும் போதும், இங்கு நல்ல கூட்டணி இருக்கும் போதும், மக்களிடம் மத்திய அரசின் திட்டங்களை எடுத்து சென்றாலே போதும் என்று தோன்றுகிறது. ஆகையால் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்.
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று தொடர்ச்சியாக கூறிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு திட்டம் வகுக்கும் போது, தமிழகத்தை வஞ்சம் தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டங்கள் வகுக்கப்படுவது இல்லை. அனைத்து மாநிலங்களையும் தழுவிதான் திட்டம் வகுக்கப்படுகிறது. இதற்காக ஆலோசனைக்குழு உள்ளது. அந்த குழு முடிவு செய்துதான் அரசிடம் ஒப்புதல் பெற்று திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்துக்கு திட்டங்கள் வரவில்லையென்றால், நீங்கள் அங்கு சென்று உங்கள் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து பேசி நிதியை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைகூறிக் கொண்டு இருப்பதை விட, நேரில் சந்தித்து பேசினால் நிதி பெற்று இருக்கலாம்.
இதையும் படிங்க: 65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!
பிரதமர் தமிழகத்துக்கு வருகிறார். தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்கிறது. நாட்டின் பிரதமர் திருப்பரங்குன்றம் சென்று முருகனை தரிசிக்க செல்கிறார். இதற்கு அரசியல் காரணம் கற்பிக்க வேண்டியது இல்லை. ஜெயலலிதாவுடன் பயணித்த சசிகலா புதிதாக கட்சி தொடங்கி உள்ளார். எல்லோருக்கும் கட்சி ஆரம்பிக்க இந்த நாட்டில் உரிமை உள்ளது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவர் என்ன கருத்தை மக்களிடம் எடுத்து செல்ல உள்ளார் என்று தெரியவில்லை.
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தமிழகத்தில் போதை காரணமாக கொலை சம்பவங்கள் நடந்து, அதனை சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்யலாம் என்ற நிலை உள்ளது. இதனை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். பா.ஜனதாவில், என்னோடு பயணித்தவர்களுக்கு மாநில அளவிலும் பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் நான் போட்டியிடவில்லை. என்னோடு பயணித்தவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளேன். அதற்கு செவிசாய்ப்பார்கள் என்று நினைக்கிறேன்.
மேலும் உலக வரலாற்றிலேயே கணவன், மனைவி நடித்த வெவ்வேறு படங்களில் ஒரே நாளில் வெளியாகி இருக்கின்றன. அந்த தியேட்டர் உரிமையாளர்கள் அழைத்ததன் பேரில் வந்து உள்ளேன். ஆழி படம் வித்தியாசமான கதை. இதே போன்று தாய்க்கிழவி படம் நன்றாக இருக்கிறது. இந்திய துணைக்கண்டத்தில் சிறந்த நடிகை இருக்கிறார் என்றால் ராதிகா சரத்குமார்தான். எந்தபடம் வெற்றி பெற்றாலும் எங்களுக்கு மகிழ்ச்சிதான் என்று கூறினார்.
இதையும் படிங்க: ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!