சிபிஎஸ்இ 8-ம் வகுப்புச் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் "நீதித்துறை ஊழல்" என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்ற விவகாரத்தை உச்சநீதிமன்றம் இன்று தானாக முன்வந்து (Suo Motu) விசாரணைக்கு எடுத்தது. தலைமை நீதிபதி சூரியகாந்த் மற்றும் நீதிபதி ஜாய் மாலியா பக்ஷி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தில் மத்திய அரசையும் NCERT அமைப்பையும் மிகக் கடுமையான வார்த்தைகளால் கண்டித்தது.
நீங்கள் சுட்ட தோட்டாவால் நீதித்துறையில் ரத்தம் பீறிடுகிறது. நீதித்துறை குறித்த இவ்வாறானத் தவறானத் தகவல் மாணவர்களிடையே மிகப்பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மிகவும் கண்டனத்திற்குரியது" எனத் தலைமை நீதிபதி சூரியகாந்த் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரத்தில் நாங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம். இந்தப் பாடம் முழுமையாகத் திருத்தப்பட்டு, புதிய புத்தகம் பிரசுரிக்கப்படும். இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் இனி அந்தப் பணியில் தொடர மாட்டார்கள் என உறுதி அளித்தார். மத்திய கல்வித்துறைச் செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் மன்னிப்பு குறித்த விபரங்கள் இல்லாததைக் கண்டறிந்த நீதிபதிகள், என்ன மாதிரியான நடைமுறை இது? எனச் சீறினர். சந்தையில் புழக்கத்தில் இருந்த 32 புத்தகங்களும் திரும்பப் பெறப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: லாவண்யா மரண வழக்கு: "மதமாற்றம் நடக்கவில்லை" உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அதிரடி அறிக்கை!
நீதிபதி ஜாய் மாலியா பக்ஷி கூறுகையில், இந்தப் பாடம் தொடர்பானத் தகவல்கள் இன்னும் இணையதளத்தில் உள்ளன. அவற்றை உடனடியாக அகற்றுவதற்கு அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார். இதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பு, ஆட்சேபனைக்குரிய அந்தப் பாடம் பொதுத் தளத்திலிருந்தும், இணையத்திலிருந்தும் முழுமையாக அகற்றப்படும் என உறுதியளித்தது. மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் வாதிடுகையில், நேற்று கூட NCERT-ன் முன்னாள் இயக்குனர் இந்தப் பாடத்தை நியாயப்படுத்திப் பேசுகிறார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நீதித்துறையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் பாடத்திட்டத்தை அமைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அளித்த உறுதியை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி: சுருக்குமடி வலை விவகாரத்தில் திங்கட்கிழமை விசாரணை!