ஈரோடு மாவட்டம் கஞ்சிகோவில் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர் மீது போலீசார் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், “சட்டத்தை நிலைநிறுத்துவதற்காகவே போலீசாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒருவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் மட்டும் அவர்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கவோ, துன்புறுத்தவோ, அவமதிக்கவோ அல்லது தாக்கவோ எந்த உரிமையும் போலீசாருக்கு இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது: “திமுக ஆட்சியில் ஊழல் மலிந்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உடல் ரீதியாகவும் மொழி ரீதியாகவும் அதிக அளவில் துன்புறுத்தப்படுவது ஆச்சரியமில்லை.
இதையும் படிங்க: முக்கிய குற்றவாளியை காப்பாற்றும் கரூர் போலீஸ்... MLA பதவி லைசன்சா? அண்ணாமலை ஆவேசம்..!
தமிழகத்தின் பொருளாதாரத்திற்கு இவர்கள் ஈடு செய்ய முடியாத பங்களிப்பை அளித்து வருகின்றனர். மெட்ரோ ரயில் திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், குடியிருப்பு கட்டிடங்கள், தொழிற்சாலைகள், சிறு உற்பத்தி நிறுவனங்கள் என அனைத்து துறைகளும் இவர்களின் உழைப்பை சார்ந்தே இயங்குகின்றன.

இவர்களுக்கு கண்ணியம் அளிக்க மறுப்பது நமது சொந்த வளர்ச்சியை நாமே சீர்குலைப்பதற்கு ஒப்பாகும். இதுபோன்ற சம்பவங்கள் திமுகவினரால் பல ஆண்டுகளாக அரசியல் லாபத்திற்காக புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக விதைக்கப்பட்ட வெறுப்பின் தவிர்க்க முடியாத விளைவுகளே ஆகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு மீண்டும் எழுந்துள்ளது. போலீஸ் துறையில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள் மாநிலத்தின் பிம்பத்தை பாதிக்கும் என்று பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், வடமாநில தொழிலாளர்களை இழிவுபடுத்தும் போக்கு அதிகரித்து வருவதாகவும் அண்ணாமலை தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மக்கள் மத்தியில் போலீஸ் - வடமாநில தொழிலாளர்கள் உறவு குறித்து பெரும் கவலை நிலவுகிறது.
இதையும் படிங்க: அண்ணாமலை விலகவில்லை... விலக்கப்பட்டார்...! S.V. சேகர் பகிரங்க குற்றச்சாட்டு..!