திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலுக்கு ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து பக்தர்கள் கணிசமாக அதிகரித்து வருகின்றனர். இதனால் கோயிலில் தினமும் கூட்டம் அலைமோதுகிறது. இந்த கூட்டத்தை சமாளிக்க புதிய பணியிடங்கள் உருவாக்க இந்து சமய அறநிலையத் துறை அனுமதி அளித்தது.
அதன்படி, 70 காவலர் பணியிடங்கள் உள்பட மொத்தம் 109 பணியிடங்களுக்கு கடந்த 2025 பிப்ரவரி மாதம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. மாதம் ரூ.13,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் உள்ள இந்த பதவிகளுக்கு 10,500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். பிப்ரவரி 2ஆம் தேதி முதல் நேர்காணல் நடைபெற்று வருகிறது.
ஆனால், இந்த நியமனத்தில் பெரும் முறைகேடு நடப்பதாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தேர்தல் நெருங்கி வருவதால், ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை திருப்திப்படுத்தும் வகையில், திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு அமைச்சர் வேலு பணியிடங்களை பிரித்து ஒதுக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: அண்ணாதுரையை கழட்டி விட்ட தவெக! விஜய் புது ப்ளான்! நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!
அமைச்சர் வேலு பரிந்துரைக்கும் நபர்களின் பெயர்களை இறுதி பட்டியலாக தொகுத்து வழங்குவார். அதன்படி பணி நியமன ஆணைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒதுக்கீடு பெற்ற நிர்வாகிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களுக்கு சிபாரிசு செய்ய தலா ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.
மேலும், ஒரு பணியிடத்திற்கு 3 முதல் 4 பேரிடம் வசூல் செய்யும் வேட்டை நடப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. ஒதுக்கீடு இல்லாத நிர்வாகிகளும் இந்த சூழலை பயன்படுத்தி பணம் வசூலித்து வருகின்றனர். இந்த தகவல் தெரிந்த அமைச்சர் வேலு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

10,500 பேர் விண்ணப்பித்த நிலையில், 109 பேருக்கு மட்டுமே பணி கிடைக்கும். மற்றவர்கள் ஏமாற்றமடைந்து எதிர்மறை மனநிலைக்கு செல்லக்கூடும் என்பதால், தற்போது நேர்முகத் தேர்வை மட்டும் நடத்திவிட்டு, தேர்தலுக்கு பின் பணி ஆணை வழங்க அமைச்சர் முடிவு செய்துள்ளார்.
ஆனால், கட்சி நிர்வாகிகள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் பணம் கொடுத்தவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், உடனே நியமனம் செய்ய வேண்டும் என நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே, தேர்தலை காரணம் காட்டி நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற யோசனை நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கட்சி நிர்வாகிகளும், பணம் கொடுத்து காத்திருப்போரும் கடும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்த முறைகேடு குற்றச்சாட்டுகள் திருவண்ணாமலை கோயில் நிர்வாகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு ரகசிய அசைன்மெண்ட்! டெல்லியிலிருந்து ஓலை! காரைக்குடியில் களமிறங்கும் பாஜக!