நீட் தேர்வு தொடர்பான முறைகேடுகள் மற்றும் கல்வி அமைப்பில் ஏற்பட்டதாகக் கூறப்படும் தோல்விகளுக்கு எதிராக டெல்லியில் 21 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், தனது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான மூன்று முக்கிய நிபந்தனைகளை வெளியிட்டுள்ளார். அவற்றில் ஏதேனும் ஒரு நிபந்தனை நிறைவேற்றப்பட்டால்கூட, உண்ணாவிரதத்தை வாபஸ் பெறத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக பொறுப்பேற்க வேண்டும் என்றும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியிருந்தார்.
21 நாட்கள் உணவு உட்கொள்ளாமல் போராட்டத்தில் இருந்ததால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, ஜூலை 18-ஆம் தேதி போலீசார் அவரை சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: 21 நாட்கள் உண்ணாவிரதம்! மோசமானது உடல்நிலை!! சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதி!
மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட அறிக்கையில், கல்வி முறையில் ஏற்பட்ட தோல்வி மற்றும் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்பதே தனது முதல் நிபந்தனை என்று அவர் கூறியுள்ளார்.

இரண்டாவது நிபந்தனையாக, பாராளுமன்றத்தை நோக்கி இன்று நடைபெறும் சிஜேபி இயக்கத்தின் பேரணியின்போது பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் தலைவர்கள் நேரில் வந்து, இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவதாக உறுதியளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், உடல்நிலை காரணமாக பேரணியில் தன்னால் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டால், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மருத்துவமனைக்கே வந்து அதே உறுதியை வழங்க வேண்டும் என்பதையும் மூன்றாவது நிபந்தனையாக குறிப்பிட்டுள்ளார். இந்த மூன்று நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று நிறைவேறினால்கூட தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடிக்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், சப்தர்ஜங் மருத்துவமனையில் தனது விருப்பத்திற்கு மாறாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், தாம் சட்டவிரோத தடுப்புக் காவலில் இருப்பதாகவும் சோனம் வாங்சுக் குற்றம்சாட்டியுள்ளார். அவரது இந்த புதிய அறிக்கை, நீட் விவகாரம் மற்றும் கல்வி சீர்திருத்தம் தொடர்பான தேசிய அளவிலான விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! நீட், ராமர் கோவில், பெண்கள் இடஒதுக்கீடு வரை அனல் பறக்கக்போகும் விவாதம்!