மத்திய அரசின் 2026-27 நிதியாண்டு பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் ஊரக வளர்ச்சி, கல்வி, குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதியில் இருந்து மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதி, மக்களுக்கான மானியங்கள், கட்டுமானப் பணிகள், வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.
தமிழக அரசு, பள்ளிக் கல்வித் துறை, ஜல்ஜீவன் மிஷன், ஊரக குடிநீர் வசதி உள்ளிட்ட முக்கிய திட்டங்களுக்கு மத்திய நிதி உதவி கோரியுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு சில காரணங்களைச் சொல்லி இத்திட்டங்களுக்கான நிதி வழங்கப்படவில்லை என்று தமிழக அரசு தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், நடப்பாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் தமிழகத்திற்குரிய பங்கை முழுமையாகப் பெறுவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுவாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுடன், தமிழக அமைச்சர்கள், துறை செயலர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கொண்ட குழு டெல்லி சென்று மத்திய துறை அதிகாரிகளை சந்தித்து நிதி ஒதுக்கீட்டை விரைவுபடுத்துவது வழக்கம். ஆனால் வரும் சட்டமன்றத் தேர்தல் காரணமாக, அரசியல் எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்களைத் தவிர்க்கும் வகையில் அமைச்சர்கள் டெல்லி செல்வதை தமிழக அரசு தவிர்த்துள்ளது.
இதையும் படிங்க: பிப்., 5-ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை! பிப்.,13ல் இடைக்கால பட்ஜெட்! எகிறும் எதிர்பார்ப்பு!

அதற்குப் பதிலாக, துறை சார்ந்த செயலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் டெல்லி சென்று தொடர்புடைய மத்திய துறைகளின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. நிதியுதவி பெறுவதற்கான திட்ட அறிக்கைகள், விரிவான ஆவணங்கள், பயனாளர் விவரங்கள் ஆகியவற்றை விரைவாகத் தயாரித்து மத்திய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வி, ஊரக வளர்ச்சி, குடிநீர் வழங்கல், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் டெல்லி பயணத்திற்கு தீவிர ஆயத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திட்ட அறிக்கைகள் தயாரிப்பு, தரவுகள் சேகரிப்பு, ஆவணங்கள் சரிபார்ப்பு ஆகிய பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
தமிழக அரசு இந்த நடவடிக்கையின் மூலம், மக்களுக்கான முக்கிய திட்டங்களுக்கு நிதி விரைவில் கிடைக்கச் செய்ய விரும்புகிறது. தேர்தல் காலத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திட்டங்களை விரைவுபடுத்துவதே இதன் நோக்கம். மத்திய நிதி பெறுவதில் தமிழகம் எடுக்கும் இந்த அணுகுமுறை குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: ₹3500 கோடியில் லட்சம் வீடா? இது எப்படி சாத்தியம்? ஸ்டாலின் அறிவிப்பால் குழப்பம் அதிகாரிகள்!