சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில், கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினரும் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினருமான ஏ.பி. சூர்யபிரகாசம் தனது பதவிகளுக்கு ராஜினாமா செய்துள்ளார்.
காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கு முக்கிய காரணமாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகை மீது கடும் குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு சூர்யபிரகாசம் எழுதிய கடிதத்தில், தமிழக காங்கிரஸை திமுகவின் “அடிமைகள் கூடாரமாக” மாற்ற செல்வப்பெருந்தகை தீவிர முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: எந்த கட்சியிலயும் இப்படி நடக்காது!! தமிழ்க காங்கிரஸ் அழிவின் பாதையில் போகிறது! ஜோதிமணி உருக்கம்!
திமுக அரசின் கடன் சுமை 10 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதை திமுகவே பட்ஜெட்டில் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், உண்மைக்கு மாறாக திமுக மீது பழி போடுவதாக காங்கிரஸ் தரவு மற்றும் பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி மீது வசைபாடுவது கண்டிக்கத்தக்கது என்று அவர் தெரிவித்துள்ளார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெகுஜன திமுக எதிர்ப்பு காரணமாக திமுக கூட்டணி படுதோல்வி அடையும் என்றும், அதில் காங்கிரஸும் சேர்ந்து தோல்வியடையக்கூடாது என்றும் சூர்யபிரகாசம் எச்சரித்துள்ளார். அதற்கு பதிலாக காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும், அப்படி செய்தால் ஆட்சியில் பங்கு கிடைக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆட்சியில் பங்கு கோரி போராடும் காங்கிரஸ் தொண்டர்களை “தற்குறிகள்” என்று வெளிப்படையாக விமர்சித்து அவமானப்படுத்திய செல்வப்பெருந்தகை தலைமையின் கீழ் பணியாற்ற என் சுயமரியாதை இடம் தரவில்லை என்று கூறி அவர் ராஜினாமா செய்துள்ளார்.
தமிழக காங்கிரஸில் திமுக கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்று கார்கே, சிதம்பரம், செல்வப்பெருந்தகை ஆகியோர் கொண்ட மூவர் அணி உறுதியாக உள்ளதாகவும், அதேநேரம் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் ஆகியோர் கொண்ட மூவர் அணி தவெக கூட்டணியை விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
ராகுலின் நண்பர் பிரவீன் சக்கரவர்த்தி மாநில நிர்வாகிகளையும் மாவட்டத் தலைவர்களையும் ரகசியமாக சந்தித்து தவெக கூட்டணிக்கு ஆதரவு திரட்டி வருவதாகவும் தகவல்கள் உள்ளன.
கரூர் எம்.பி. ஜோதிமணி ஏற்கென்வே செல்வப்பெருந்தகை தலைமையை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், இப்போது சூர்யபிரகாசத்தின் ராஜினாமா கட்சிக்குள் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. பொங்கலுக்கு பிறகு கூட்டணி தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பே உள்கட்சி பிரச்சினைகள் வெடித்துள்ளது காங்கிரஸ் மேலிடத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காங்கிரஸின் இந்த உள்மோதல் வரும் தேர்தலில் கட்சியின் செயல்பாடுகளை பாதிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் அறிவிப்பு 3 முறை ஒத்திவைப்பு!! 'பேரம் பஞ்சாயத்து' எதிரொலியா?! உற்சாகம் இழந்த தொண்டர்கள்!