புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மாநில நிதியமைச்சர்கள் மாநாட்டில் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் பங்கேற்று, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மாநில நிதியுரிமை தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.
டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு ‘வளர்ந்த பாரதத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்திற்கு நிதியளித்தல்’ என்ற கருப்பொருள் முன்வைக்கப்பட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மாநிலங்களின் நிதி நிலை, மத்திய–மாநில நிதி உறவு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டன. இதில் பல்வேறு மாநிலங்களின் நிதியமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாநாட்டில் பங்கேற்ற தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து தமிழகத்தின் நிதி தொடர்பான கோரிக்கைகளை எடுத்துரைத்ததாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, நிதியுரிமை மற்றும் கூட்டாட்சி உரிமைகள் தொடர்பான விவகாரங்கள் குறித்து விவாதித்ததாக அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் திருப்பம்! இடைக்கால தடை நீட்டிப்பு! புதுச்சேரி நீதிமன்றத்தில் பரபரப்பு!

தமிழகத்தில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்தப்படும் உள்ளாட்சி மற்றும் பள்ளிக் கல்வி உள்ளிட்ட திட்டங்களுக்கான நிலுவைத் தொகைகளை விரைந்து வழங்க வேண்டும் என்றும், ஜி.எஸ்.டி. இழப்பீடு உள்ளிட்ட நிதியை விடுவிக்க வேண்டும் என்றும் மரிய வில்சன் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், பேரிடர் நிவாரண நிதி, முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசின் பங்களிப்பு, மாநிலங்களுக்கு இடையிலான நியாயமான வரி பகிர்வு உள்ளிட்ட விவகாரங்களும் தமிழகத்தின் சார்பில் முன்வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டைத் தொடர்ந்து, தனது சமூக வலைதளப் பதிவில் மாநாட்டில் பங்கேற்ற புகைப்படங்களையும் மரிய வில்சன் பகிர்ந்துள்ளார். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான தேவைகள் மற்றும் மாநிலத்தின் நிதி உரிமைகள் குறித்து விரிவாக கருத்துகளை முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களின் நிதி தேவைகள் மற்றும் மத்திய அரசின் நிதிப் பகிர்வு தொடர்பான விவகாரங்கள் தொடர்ந்து அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், டெல்லியில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழகத்தின் கோரிக்கைகள் இடம்பெற்றிருப்பது கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: சகோதரர் தாக்கப்பட்ட வழக்கு! அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கில் திடீர் திருப்பம்! நீதிமன்றம் எடுத்த முடிவு!