தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் வழங்கப்பட்டிருந்த டெண்டர்களை மறுபரிசீலனை செய்து, அவற்றை ரத்து செய்து புதிய மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் அரசு திட்டங்களுக்கான செலவுகளை குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய ஆட்சிக் காலங்களில் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக பல்வேறு துறைகளில் ஏராளமான பணிகளுக்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. பொதுப்பணி, நீர்வளம், நெடுஞ்சாலை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, அறநிலையத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் பல திட்டங்களுக்கு டெண்டர்கள் வழங்கப்பட்டிருந்தன.
தற்போது அந்த டெண்டர்களை ஆய்வு செய்து, தேவையானவற்றை மட்டும் தொடர்ந்து செயல்படுத்தவும், அதிக மதிப்பீடு கொண்ட திட்டங்களை மறுபரிசீலனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இனி டிரான்ஸ்ஃபர் கேட்டா சிரமம்தான்! மக்கள் தொகை கணக்கெடுப்பு! அதிகாரிகள் இடமாற்றத்துக்கு தடை!
இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே சில துறைகளில் வழங்கப்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விரைவில் மேலும் சில துறைகளிலும் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதித்துறை வட்டார தகவலின்படி, கடந்த காலங்களில் நிர்வாக காரணங்களை கூறி டெண்டர்கள் ரத்து செய்யப்பட்ட பின்னர், புதிய டெண்டர்களில் திட்ட மதிப்பீடுகள் அதிகரித்த சம்பவங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. சில திட்டங்களில் மதிப்பீட்டு தொகை 20 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்ததாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போதைய நடவடிக்கையின் மூலம், மறுடெண்டர் கோரும் போது திட்ட செலவுகளை கட்டுப்படுத்த முடியும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புதிய மதிப்பீட்டில் 10 முதல் 20 சதவீதம் வரை செலவு குறையும் வாய்ப்பு இருப்பதாக நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு நிதி முறையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும், தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும் என்பதும் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டதால் ஏற்கனவே பணிகளை எதிர்பார்த்திருந்த ஒப்பந்ததாரர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும், கவலையும் ஏற்பட்டுள்ளது.
புதிய டெண்டர் நடைமுறைகள் எவ்வாறு இருக்கும், எந்தெந்த திட்டங்களில் மாற்றம் செய்யப்படும் என்பது குறித்து அரசு தரப்பில் வெளியாகும் அடுத்தடுத்த அறிவிப்புகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களில் இந்த நடவடிக்கை எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கவனிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: துணை முதல்வர் பதவி கேட்கும் விசிக?! திருமாவளவன் மீது விஜய் கடும் அதிருப்தி?