தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்ற நிலையில், தலைமை செயலகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) அமலுக்கு வந்தவுடன் புதிய அரசாணைகள் பிறப்பிக்க முடியாது என்பதால், கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் நிலுவையில் இருந்த பல்வேறு கோப்புகளுக்கு அவசரமாக அரசாணைகள் தயாரிக்கும் பணிகள் இரவு பகலாக நடந்து வருகின்றன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், அத்தியாவசிய தேவை தவிர்த்து எந்த புதிய அறிவிப்பும், திட்டமும், நிர்வாக முடிவும் எடுக்க முடியாது. இதனால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, வனத்துறை, பதிவுத்துறை, சுகாதாரம், கல்வி, உயர்கல்வி, சமூக நலன், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலுவையில் இருந்த கோப்புகள் அனைத்தும் துரிதமாக ஆய்வு செய்யப்பட்டு வரைவு அரசாணைகள் தயாரிக்கப்படுகின்றன.
தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிப்பதாவது: ஒவ்வொரு துறையிலும் குறைந்தது 20 முதல் 60 வரை அரசாணைகள் தயாராகி வருகின்றன. சில துறைகளில் 100-க்கும் மேற்பட்ட கோப்புகள் நிலுவையில் இருந்தன.
இதையும் படிங்க: ஓ.பி.எஸ்-க்கு ஸ்டாலின் கொடுத்த ரகசிய அசைன்மெண்ட்! முக்குலத்தோர் வாக்குகளை வளைக்க திட்டம்!!

இவற்றில் பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட திட்டங்கள், கொள்கை முடிவுகள், நிர்வாக மாற்றங்கள், பதவி உயர்வுகள், இடமாற்றங்கள், நிதி ஒதுக்கீடுகள் ஆகியவை அடங்கும். தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக இவை அனைத்தையும் அரசாணையாக்கி முடிக்க வேண்டும் என்ற நெருக்கடியில், அதிகாரிகள் இரவு நேரம் வரை பணியாற்றி வருகின்றனர்.
குறிப்பாக, பொதுமக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் திட்டங்கள், உதவிகள், சலுகைகள் தொடர்பான அறிவிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு இவை செய்ய முடியாது என்பதால், துறை செயலாளர்கள், கூடுதல் தலைமைச் செயலாளர்கள் அளவில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. சில துறைகளில் ஏற்கெனவே 40-க்கும் மேற்பட்ட அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவை விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் நெருங்கும் நிலையில் இத்தகைய அவசர அரசாணைகள் அதிகரிப்பது வழக்கமானது என்றாலும், இம்முறை நிலுவை கோப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தலைமை செயலகத்தில் பரபரப்பு காணப்படுகிறது. இந்த அரசாணைகள் வெளியான பிறகு தேர்தல் களத்தில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அரசியல் வட்டாரங்கள் உற்று நோக்கி வருகின்றன.
இதையும் படிங்க: ஸ்டாலின் பார்முலா! இதுவரை 36 தொகுதிகள் கூட்டணிக்கு ஒதுக்கீடு! பின்னணியில் காத்திருக்கும் தரமான ஸ்கெட்ச்!