சென்னை நேரு விளையாட்டரங்கில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்க நிகழ்ச்சி, கோவையில் ஈச்சனாரிப் பகுதியில் உள்ள கற்பகம் பல்கலைக்கழகத்திலும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் (எம்.பி.) திருச்சி சிவா, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் எதிர்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்துப் பேசினார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழ்கிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, 2023 ஆம் ஆண்டு அண்ணா பிறந்த நாளில் இத்திட்டம் துவங்கப்பட்டது. முன்பிருந்த ஆட்சியில் நிதி பற்றாக்குறை வைத்துவிட்டுச் சென்ற காரணத்தினால், அதனைச் சரிசெய்து இந்தத் திட்டங்களைத் துவங்கினோம்.
தமிழ்நாட்டில் தற்போது 1 கோடியே 14 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் இந்த உரிமைத் தொகையைப் பெற்று வருகிறார்கள். தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு பெண்களும் தற்போது வரை ₹28,000 பெற்றுள்ளார்கள். பல்வேறு மகளிர் முன்வைத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து, ஜூலை மாதம் முகாம்கள் நடத்தி, அதன் அடிப்படையில் இன்று கூடுதலாக 17 லட்சம் தகுதியுள்ள மகளிர்க்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இது சராசரி குடும்பப் பெண்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை.யில் அதிர்ச்சி: ஆய்வகத்தில் வெடித்த கண்ணாடிக் குடுவை; 2 மாணவர்கள் படுகாயம்!
கோவையில் மட்டும் இதுவரை 4 லட்சத்து 25 ஆயிரத்து 705 மகளிர் இந்தத் திட்டத்தில் பயன்பெற்றுள்ளார்கள். இன்று கூடுதலாக 1600 பேர் இத்திட்டத்தில் பயன்பெறுகிறார்கள். பல இடங்களை ஒப்பிடுகின்றபோது கோவை அதிகமான எண்ணிக்கையாகும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார். பெண்களை உயர்த்தினால் சமுதாயம் உயரும் என்ற அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தற்போது அனைத்து வகையிலும் முன்னோக்கி நிற்கிறது.
டெல்லியில் செயல்படும் நிதி ஆயோக் என்ற அமைப்பு, நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் என்று கூறியுள்ளது. பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாது என்ற நிலை மாறி, உயரத்தின் உச்சியைத் தொடலாம் என்று வாழ்ந்து வருகிறார்கள் என்றால், அது பெரியார் விரும்பிய புரட்சிப் பெண் என்பதன் வளர்ச்சி தான் என்றும், அதனைத் திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சர் செய்து வருவதாகவும் திருச்சி சிவா குறிப்பிட்டார்.
கூடுதலாக மகளிர் உரிமைத் தொகை வழங்குவது, பள்ளி மாணவர்களுக்கான லேப்டாப் திட்டம் ஆகியவை எல்லாம் தேர்தலுக்காகத்தான் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த கருத்து குறித்தான கேள்விக்கு அவர் பதிலளித்தார். "இந்தத் திட்டம் துவங்கிய 2023 என்பது தேர்தலுக்கான காலம் கிடையாது. இது அப்பொழுதே தொடங்கப்பட்ட திட்டம். மேலும் மகளிர்க்காக விடியல் பயணம் திட்டம் என்பது எல்லாம் தேர்தலைக் குறி வைத்து நாங்கள் அறிவித்த திட்டங்கள் அல்ல. பெண்களைச் சமுதாயத்தில் முன்னேற்றுவதற்காகும் என்று கூறினார்.
இதையும் படிங்க: ரெஃபெக்ஸ் குழுமத்தில் ஐ.டி. ரெய்டு: ₹1,000 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு!