தமிழகத்தில் கடந்த ஆண்டு பள்ளி இடைநிற்றல் விகிதம் கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் UDISE+ அறிக்கை இதை உறுதிப்படுத்தியுள்ளது. தொடக்கப் பள்ளிகளில் 2.7%, நடுநிலைப் பள்ளிகளில் 2.8%, மேல்நிலைப் பள்ளிகளில் 8.3% வரை இடைநிற்றல் அதிகரித்துள்ளது.
இதை கட்டுப்படுத்த 'இடைநிற்றல் இல்லாத தமிழகம்' என்ற இலக்குடன் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. மாவட்ட கலெக்டர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்தது. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 1,400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டனர்.
ஆனால் ஆசிரியர்கள் பற்றாக்குறை, பெற்றோர் ஒத்துழைப்பின்மை போன்ற காரணங்களால் பல மாணவர்களின் வருகை தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: விஜய்க்கு ரஜினி தான் உதாரணம்..! ரசிகர் மன்றம் பிரச்சாரம் செய்யாது... போட்டு தாக்கிய அண்ணாமலை..!
இந்த நிலையில், பள்ளிக்கு சரியாக வராத இடைநிற்றல் மாணவர்களையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களை வலியுறுத்தி வருகின்றனர். இது பள்ளி நிர்வாகத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக கல்வி விதிகளின்படி, பொதுத்தேர்வு எழுத 75% வருகைப்பதிவு கட்டாயம். ஆனால் அதிகாரிகள், வருகை இல்லாத மாணவர்களிடம் மருத்துவ சான்றிதழ் அல்லது பெற்றோர் கடிதம் பெற்றுக் கொண்டு அனுமதிக்க சொல்கின்றனர்.
ஆனால் பெரும்பாலான மாணவர்கள் அத்தகைய ஆவணங்களையும் கொண்டு வருவதில்லை. செய்முறை குறிப்பேடுகளும் அவர்களிடம் இல்லை. இந்நிலையில், "காணாமல் போனது" என எழுதி வாங்கிக் கொண்டு, அவர்களை நன்றாக படிக்கும் மாணவர்களுடன் சேர்த்து செய்முறைத் தேர்வு எழுத வைக்கிறோம் என தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
சில இடங்களில் விடைகளை பார்த்து எழுத வைக்கும் நிலை ஏற்படுகிறது. ஆனால் எழுத்துத் தேர்வில் இவர்களால் தேர்ச்சி பெற முடியாது. இதனால் பள்ளியின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. "இடைநிற்றல் குறைக்க வேண்டும் என்பதற்காக தரத்தை குறைக்கிறார்களா?" என ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த நிலை தொடர்ந்தால், கல்வித் தரம் மேலும் சரியும் என்ற அச்சம் நிலவுகிறது. அரசு இலக்குகளை அடைய நிர்ப்பந்தம் கொடுப்பதால், பள்ளிகளில் உண்மையான கல்வி பாதிக்கப்படுகிறது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து ஒத்துழைத்தால் மட்டுமே இடைநிற்றல் முற்றிலும் குறையும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: இனி விசிலு வேண்டாம்! ஸ்பீக்கருக்கு மாறுங்க!! தவெக சின்னத்தை கண்டு அரசுக்கு அலர்ஜி! தூய்மை பணியாளர்களுக்கு உத்தரவு!